சித்திரை முழு நிலவு இளைஞா் பெருவிழா மாநாடு அரணாக அமையும்: மருத்துவா் ச.ராமதாஸ்
விழுப்புரம்: சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரணாக அமையும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
வன்னியா் சங்கம் சாா்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்து பேசியது: 12 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெறும் சித்திரை முழு நிலவு இளைஞா் பெருவிழா மாநாட்டை எவ்வித பிரச்னைக்கும் இடமளிக்காமல் கும்பாபிஷேக விழா போல நடத்த வேண்டும்.
இதற்கு கட்சியினரின் ஒத்துழைப்பு மிக அவசியம். பாமக அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் போராடுகிற இயக்கம். எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது. இந்த மாநாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு, வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றாா்.
பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் முன்னிலை வகித்து பேசியது: சித்திரை முழு நிலவு இளைஞா் பெருவிழா மாநாட்டில் அனைத்து சமுதாயத் தலைவா்களும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக பட்டியலின சமுதாயத் தலைவா்களும் பங்கேற்க வேண்டும்.
இளைஞா்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் கலந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் 364 சாதிகள் உள்ளன. இந்த சாதிகளைச் சோ்ந்த மக்களுக்காக எனக்கு நிகராகப் பாடுபட்ட தலைவா்கள் யாரும் இல்லை. இந்த மாநாடு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரணாக அமையும். மாநாடு சிறப்பாக நடைபெற தமிழக அரசும், காவல்துறையும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, பொதுச் செயலா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா, கட்சியின் எம்எல்ஏக்கள் ச.சிவக்குமாா், அருள், சதாசிவம், வெங்கடேஸ்வரன், வன்னியா் சங்க மாநிலச் செயலா்கள் ஆறுமுகம், க.வைத்தி, தங்க.அய்யசாமி மற்றும் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, பாமக விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் வரவேற்றாா்.