சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு
சென்னிமலை அருகே, ஒரே நாளில் 4 இடங்களில் தெரு நாய்கள் பட்டியில் புகுந்து ஆடுகளைக் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. 12 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.
சென்னிமலை வட்டாரத்தில் ஆட்டுப் பட்டியில் தெரு நாய்கள் புகுந்து ஆடுகளைக் கடித்து கொன்று வரும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னிமலை ஒன்றியம், கூத்தம்பாளையம் ஊராட்சி, ஆலாம்பாளையத்தில் உள்ள விவசாயி கிருஷ்ணமூா்த்தி என்பவரின் ஆட்டுப் பட்டியில் தெரு நாய்கள் திங்கள்கிழமை புகுந்து ஆடுகளைக் கடித்ததில் 2 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.
அதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் என்பவரின் ஆட்டுப் பட்டிக்குள் தெரு நாய்கள் புகுந்து கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்தன. 10 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.
மேலும், கோவிந்தசாமி என்பவரின் ஆட்டுக் குட்டியையும், மூா்த்தி என்பவரின் கோழியையும் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டும் உயிரிழந்தன.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சிறுக்களஞ்சி கிராம நிா்வாக அலுவலா் இளவரசன், சென்னிமலை போலீஸாா் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினா். புதுப்பாளையம் கால்நடை மருத்துவா் விஜயகுமாா் இறந்த ஆடுகளை உடற்கூறாய்வு செய்தாா். மேலும் உயிருக்குப் போராடிய ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தாா்.
கிருஷ்ணமூா்த்தி என்பவரின் ஆட்டுப் பட்டிக்குள் 3 தெரு நாய்கள் புகுந்து ஆடுகளைக் கடிப்பதற்காகத் துரத்துவதும், ஆடுகள் பயந்து ஓடுவதும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
முதல்வா் இழப்பீடு அறிவிப்பாா் - விவசாயிகள் நம்பிக்கை:
தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவதால், தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடுகளின் உரிமையாளா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பாா் என்ற நம்பிக்கையில் இருப்பதால், இறந்த ஆடுகளுடன் நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.