மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
தஞ்சை, திருப்பனந்தாள் சிவாலயம்: பக்தைக்கு உதவத் தலை சாய்த்த ஈசன்; குருவாக அருளும் அருணஜடேஷ்வரர்!
குருவருள் இருந்தால் சகலத்தையும் வெல்லலாம் என்பார்கள். அப்படி ஞானத்தை நமக்கு அள்ளித்தரும் குருமார்கள் அநேகர் இந்த மண்ணில் வாழ்ந்தனர்... வாழ்கின்றனர். குரு என்பவர் ஈசனின் வடிவம். ஈசனே குருவானால் அதைவிட வேறு என்ன பேறு வேண்டும்? அந்த வகையில் ஈசன் குருவாக அமர்ந்து ஞானம் அருளும் தலம் ஒன்று உண்டு.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் - அணைக்கரை சாலையில் அமைந்துள்ளது திருப்பனந்தாள்.
ஐந்துவகை விருட்சங்களில் முதன்மையானது பனைமரம். பனைமரத்தின் அடியில் சுயம்புவாக ஈசன் தோன்றிய தலம் என்பதால் திருப்பனந்தாள் என்றானது என்பார்கள். இதற்கு தாடகை ஈஸ்வரம் என்கிற பெயரும் உண்டு. ‘தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே’ என்பது திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்.

முன்னொருகாலத்தில் தாடகை என்ற பெண் இத்தல இறைவனை நாள்தோறும் பூஜித்து வந்தாள். ஒரு நாள் சிவனுக்கு மாலை சாத்தும் போது அவளது மேலாடை நழுவியது.
ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டாள். அதேவேளை மாலை சாத்தமுடியாமல் பின்வாங்க வேண்டியிருந்தது. ஒருகணம் அவள் வருந்தினாள். அப்போது ஈசன் அந்தப் பெண்ணுக்கு மனம் இரங்கி தன் தலையைச் சற்று சாய்த்து மாலையை அணிவிக்க உதவினார்.
மங்கையும் மாலையை அணிவித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வணங்கி சென்றாள். அன்று முதல் பக்தைக்கு அருளிய பரமனின் கருணைக்குச் சாட்சியாக அத்தல சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது.
பின்னொருநாள் சோழ மன்னன் இக்கோயிலில் திருப்பணி செய்தான். அப்போது சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டான். உடனே தனது ஆள்களை அனுப்பி லிங்கத்திருமேனியை நேராக்கக் கட்டளையிட்டான்.
பக்திக்குச் சாய்ந்த தலை படை பலத்துக்கா நிமிரும். யாராலும் லிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லை. முடிவில் யானைகளைக் கொண்டுவந்து சிவலிங்கத்தோடு சேர்த்துக் கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் ஈசன்.
அப்போது 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் வந்திருந்தார். அவர் ஈசனின் தலையை நிமிரச் செய்ய மனம் கொண்டார். சிவனுக்கு குங்குலியப்புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து, மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார்.
கயிறு இறுகி நாயனாரின் உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் அவர் தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். மீண்டும் அன்புக்குக் கட்டுப்பட்டார் சிவன். தலை நிமிர்ந்தார். சிவலிங்கம் நேரானது. தாடகை பக்திக்குத் தலை சாய்ந்த ஈசன், குங்கிலிய நாயனாரின் பக்திக்கு நிமிர்ந்தார். இப்படி பக்தி செய்பவர்க்காக மனம் இரங்கும் ஈசன் வாழும் தலம் இது.

இத்தல ஈசன், ஞானசக்தியாக விளங்கும் அன்னை உமையவளுக்கே குருவாக இருந்து உபதேசம் செய்கிறாராம். ஈசனின் ‘வெள்ளந்தாழ் விரிசடை’ ஞானத்தின் அடையாளம் என்பர். இந்த திருப்பனந்தாள் ஆலயத்தில் ஸ்ரீபிரகன்நாயகி சமேதராக அருளும் ஸ்ரீஅருணஜடேஸ்வரரின் லிங்க பாணத்தில் ஜடாமுடி இருப்பதை இன்றும் தரிசிக்கலாம்.
மந்திர உபதேச மகிமையை உலகுக்கு உணர்த்தவிரும்பினாள் உமாதேவி. அவற்றைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று ஈசனிடம் கேட்டாள். 'தலங்களில் அருணாசலமும், மந்திரங்களில் பஞ்சாட்சரமும் விசேஷம். அருணாசலத்துக்கு நிகரான ஒரு தலம் பனை மரங்கள் அடர்ந்த தாலவனமாகத் திகழ்கிறது. அங்கு சென்று தவம் செய். உமக்கு யாம் அருள் செய்வோம்' என்றார் ஈசன்.
அதன்படி பூலோகம் வந்து தாலவனத்தில் அமர்ந்து, இடைவிடாமல் சிவபூஜை செய்தாள் அன்னை. அதனால் மகிழ்ந்த ஈசன், அம்பிகைக்குக் காட்சிகொடுத்து, சைவ சித்தாந்த நுட்பங்களை எடுத்துச்சொல்லியதோடு, பஞ்சாட்சரத்தையும் உபதேசித்தார்.
உமாதேவி உபதேசம் பெற்றதைக் குறிக்கும் வண்ணம் இத்தலத்து அம்பாளின் வலது செவி, ஸ்வாமியின் பக்கம் நோக்கியிருப்பதை இன்றும் காணலாம்.
ஒருமுறை, சாபத்துக்கு ஆளான சந்திரன், தன் பொலிவை இழந்தான். பின்னர் இத்தலத்து செஞ்சடையப்பரிடம் சரணடைந்து, சந்திர தீர்த்தம் அமைத்து நீராடி வணங்கி மீண்டும் புதுப்பொலிவும் பதவியும் அடைந்தான் என்கிறது தலபுராணம். எனவே இங்கேதிங்கட்கிழமைகளில் சந்திர தீர்த்தத்தில் நீராடி, செஞ்சடையப்பரை வழிபட்டால் சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். மன அமைதி கிடைக்கும் என்கிறார்கள். மாசி மாத சதுர்த்தசி நாள், இங்கு வந்து வழிபட்டு சந்திர தோஷத்துக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தினம் என்கிறார்கள்.

நாகதோஷ நிவர்த்தி தலமாகவும் இது இருப்பதால், இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும்; நல்ல மக்கட்பேறு வாய்க்கும் என்கிறார் பக்தர்கள்.



















