பீகார்: ரூ.5 லட்சத்திற்கு இலவச சிகிச்சை டு 1 கோடி அரசு வேலைகள்- பாஜக கூட்டணி வாக...
நாகப்பட்டினம் எட்டுக்குடி முருகன் கோயில்: தண்ணீர் பாலாக மாறிய அதிசயம் நிகழ்ந்த தலம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளும் மிகவும் சிறப்பானவை. அதற்கு இணையான தலங்களும் ஏராளமாக உள்ளன. அதிலும் முருகப்பெருமான் தன் பக்தர்களுக்குக் காட்சி அருளி அவர்களின் வாழ்வை மாற்றிய தலங்களும் அநேகம். அப்படி ஒருதலம் தான் எட்டுக்குடி.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி பேருந்து மார்க்கத்தில், சீரா வட்டத்திலிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். இத்தல முருகன் வால்மீகி முனிவர் முருகப்பெருமானை வழிபட்ட தலம்.
முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய சிக்கலுக்குச் சென்று அங்கே அன்னையிடம் வேல் வாங்கி அதன்பின்தான் திருச்செந்தூர் வந்தார் என்கிறது தலபுராணம்.

வால்மீகியும் இந்திரனும் இத்தலத்தில் முருகப்பெருமானை எண்ணி மாபெரும் யாகம் ஒன்றைச் செய்தனர். யாகத்தின் முடிவில் முருகப்பெருமான் மனம் மகிழ்ந்து காட்சி கொடுத்தார். இந்தத் திருக்காட்சியை அனைவரும் கண்டு மனம் மகிழ்ந்தனர். அவர்களுள் ஒரு சிற்பியும் இருந்தார்.
அவர் மனத்தில் முருகப்பெருமானின் காட்சி அப்படியே உறைந்தது. அந்தக் கோலத்திலேயே முருகப்பெருமானுக்கு அழகான சிலை ஒன்றை வடிக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரே கல்லில் மயில்மீது முருகப்பெருமான் கால் ஊன்றி நின்ற வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியிருக்கும் விதமாக அந்த சிற்பத்தைச் செய்துமுடித்தான்.
அந்த அற்புதமான சிற்பம் குறித்துக் கேள்விப்பட்ட மன்னன் அங்கு வந்து தரிசித்து வியந்தான். இதுபோன்ற ஒரு சிற்பத்தை வேறு தேசத்தினர் யாரும் செய்துவிடக்கூடாது. இவரும் செய்துகொடுத்துவிடக் கூடாது. மேலும் உலகமே இந்த அற்புதத்தைக் காண தன் தேசம் வர வேண்டும் என்று நினைத்தவன் சிற்பியின் கைக் கட்டை விரல்களை வெட்டச் சொன்னான்.
முருகன் அருளால் வலி வாதை இல்லாமல் சிற்பி தப்பினார். ஆனாலும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. பிற விரல்களைக் கொண்டு மற்றுமொரு முருகன் சிற்பம் செய்தார். அதுவும் அச்சு அசலாக அப்படியே அமைந்தது. இந்த முறையும் அதைக் கண்டு வியந்த மன்னன், இன்னொரு சிற்பத்தை இவர் செய்யக் கூடாது என்று எண்ணி சிற்பியின் கண்களை குத்திவிடுவாறு கட்டளையிட்டான்.
அதேபோல் சிற்பியின் கண்கள் குத்தப்பட்டன. ஆனால் முருகப்பெருமானின் திருக்காட்சிதான் அவர் மனத்துள் நிறைந்திருக்கிறதே. அதைக் கண்டு மகிழ்ந்தபடியே இருந்தார் சிற்பி. மீண்டும் ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்துத் தன் கையால் வருடி வருடி சிற்பம் வடித்தார். சிற்பம் அதே அழகுடனும் பொலிவுடனும் தோன்றியது.

எல்லோரும் அவர் திறமையை வானளாவப் புகழ்ந்தனர். மன்னன் ஓடிவந்து அவர் கால்களில் விழுந்து வணங்கி அந்த முருகப்பெருமானின் விக்ரக அழகை வர்ணித்தான். இதைக் கேட்ட சிற்பிக்கு இப்போதுதான் சிறு வருத்தம் ஏற்பட்டது. 'முருகா... எல்லோரும் கண்டு மகிழும் இந்தத் திருவுருவை நான் காண இயலவில்லையே' என்று வருந்தினார்.
மனம் நெகிழ்ந்தார் முருகன். சிற்பிக்குப் பார்வை அருளினார். அப்போது, 'என் கண்ணையே உனக்குத் தருகிறேன்' என்று சொன்னாராம்.
இத்தலத்தில் நாம் முருகனை தரிசிக்கும்போது குழந்தையாக நினைத்தால் பால முருகனாகவும், இளைஞனாகக் கருதி தரிசித்தால் இளைய கோலத்திலும், முதியவனாகக் கருதி தரிசித்தால் முதிய கோலத்திலும் காட்சி தருவாராம் முருகன். அத்தகைய சிற்ப சிறப்பை உடையது இந்தத் தலம்.
இத்தலத்தில், ஆனந்தவள்ளி சமேத செளந்தரேஸ்வரர், தல விநாயகர், நவ வீரர்கள், கூத்தாடும் கணபதி, சுரத் தேவர், ஸ்ரீநிவாஸ செளந்தராஜப் பெருமாள், அனுமன், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
இத்தலத்தைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களுக்கும் எட்டுக்குடி முருகனே குலதெய்வமாக விளங்குகிறார். மீனவக் கிராம மக்கள் இத்தலத்து முருகனையே பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்முன், இங்கு வந்து முருகனை வழிபட்டு, சரவண பொய்கையின் தீர்த்தத்தை எடுத்துச் சென்று படகுகள் மீது தெளிப்பார்கள். அதன் பிறகே கடலுக்குச் செல்கிறார்கள்.

சுனாமிப் பேரழிவு பாதிப்பின்போது வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் என்ற மீனவக் கிராமத்தில் உயிரிழப்பைத் தடுத்தவர், இந்த எட்டுக்குடி முருகன்தான் என்று மீனவ மக்கள் நம்புகிறார்கள். எனவே ஆண்டுக்கு ஒருமுறை அந்த கிராம மக்கள் தங்கள் குடும்பத்தோடு பால்குடம் எடுத்து வந்து, இங்கே முடிகாணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர்.
இத்தல முருகனுக்கு அபிஷேகம் செய்து, அபிஷேகத் தேனைப் பிரசாதமாகப் பெற்று உண்டுவர மகப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படி வேண்டிக்கொண்டு பிறக்கும் குழந்தையை இங்கே முருகனுக்கு தத்துக்கொடுப்பது வழக்கம்.
இத்தலத்தில் சத்ரு சம்ஹார ஹோமம் செய்தால் வழக்குகளில் வெற்றி உறுதி என்கிறார்கள்.
தைப்பூசம் இங்கே விசேஷம். காலையில் மஞ்சத்தில் வீதியுலா, மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா, சிறப்பு அபிஷேகங்கள், காவடி வேண்டுதல்கள் என்று கோலாகலமாக இருக்கும் கோயில்.
இங்கே வாழும் ஒரு குடும்பத்துக்கு `நாக்கறுத்தான் பரம்பரை’ என்ற பெயருண்டு. இதன் பின்னணியில் உள்ள வரலாறு சுவாரஸ்யமானது. தியாகராஜன் என்பவர் ஆண்டுதோறும் முருகப்பெருமானுக்குப் பால்காவடி எடுத்து வந்து வழிபடுவார். ஒரு முறை பாலுக்குப் பதிலாக பச்சை தண்ணீரை காவடியில் கட்டிக்கொண்டார். `இந்தத் தண்ணீர் எட்டுக்குடி முருகன் சந்நிதியை அடையும்போது அவனருளால் பாலாக மாறும்’ என்று சபையோர் முன்னிலையில் கூறிவிட்டுப் புறப்பட்டாராம்.
ஆனால், எட்டுக்குடியை அடைந்தபின், தண்ணீர் பாலாக மாறவில்லை. தவறான வாக்குறுதி கொடுத்ததற்காக, முருகன் சந்நிதியில் வைத்து தன்னுடைய நாக்கைத் துண்டித்துக் கொண்டார். ஆனால், ஒரு சொட்டு ரத்தம் சிந்தியதுமே அவரது நாக்கு மறுபடியும் ஒட்டிக்கொண்டது. தண்ணீர் குடம் பால் குடமாக மாறியது. அதைக் கண்ட அனைவரும் முருகப்பெருமானின் பேரரருளை எண்ணி வியந்து போற்றினார்களாம். இப்படிக் கலியுகத்தில் வாழும் தெய்வம் எனத் தன்னை நாள்தோறும் அடியவர்களுக்கு அருளி உணர்த்திவரும் எட்டுக்குடி முருகனை வாய்ப்பிருப்பவர்கள் சென்று வழிபட்டு வாருங்கள்.













.jpg)







