பவுனுக்கு ரூ.3,000 குறைந்த தங்கத்தின் விலை - காரணம் என்ன? இன்னும் குறையுமா?
நாகை மாவட்டம், வலத்தான்பட்டினம் வரதராஜ பெருமாள் கோயில்: மழலை வரம் தரும் 3 சனிக்கிழமை பிரார்த்தனை!
தமிழகத்தில் காவிரி பாயும் வழிகள் எங்கும் திவ்ய தேசங்களும் தேவாரத் தலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இதன் மூலம் காவிரி மகத்துவம் உலகுக்கு உணர்த்தப்படுகிறது. ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதை, 'துலா ஸ்நானம்' என்று போற்றுகிறார்கள். காரணம் இந்த மாதத்தில் காவிரியில் நீராடினால் சகல பாவங்களும் தீரும். அதிலும் காவிரித்தாய்க்கு பகவான் விஷ்ணு அருள் செய்த தலம் என்றால் எத்தனை விசேஷம்... வாருங்கள் அப்படி ஒரு தலத்தை இன்று தரிசனம் செய்வோம்.
வங்கக் கடலில் சங்கமிக்கப் பாய்ந்து வரும் காவிரித் தாய், வழியில் ஓரிடத்தில் மட்டும் சற்றுத் தயக்கத்துடன் மேற்கே திரும்புவதாகத் தோன்றும். அந்த இடத்துக்கு வலத்தான் பட்டினம் என்பது பெயர். இந்தத் தலம் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே அமைந்துள்ளது. காவிரித் தாய் வலப்புறமாக சுற்றிப் பாய்வதால் இதற்கு வலத்தான்பட்டினம் என்பது பெயராயிற்று. இந்தக் கரையில்தான் வரதராஜப் பெருமாள் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார். அவருக்கும் இந்தத் தலத்துக்கும் என்ன தொடர்பு?

குடகு மலையில் பிறந்து பாய்ந்துவந்த காவிரித்தாய் சமுத்திரத்தில் சங்கமிக்க விரும்பினாள். இந்த இடத்துக்கு வந்தபோது சிறிது திகைத்து, 'இன்னும் சமுத்திரராஜன் இருக்குமிடம் ரொம்ப தூரமோ' எனத் திகைத்து, வந்த வழியில் திரும்பினாள்.
அப்போது அவளுக்குக் காட்சி தந்த இத்தலத்துப் பெருமாள், ‘தூரம் அதிகமில்லை. இங்கிருந்து வலமாக சென்றால், ஒரு காத தூரத்தில் சமுத்திரம் உள்ளது'’ என வழிக்காட்டினாராம். இங்கு மட்டுமே காவிரி மேற்கே திரும்பி சற்று தூரம் பாய்ந்து, பிறகு கிழக்கு நோக்கிச் செல்கிறாள் என்கிறது தலபுராணம்.
இத்தலம் புராண காலத்தில் கன்னிமா ரிஷிகள் தவமிருந்து பெருமாளை வழிபட்டதால் கன்னிமாந்துறை என்று அழைக்கப்பட்டது. அப்படி இத்தலத்துப் பெருமாள் ரிஷிகளும் முனிவர்களும் தேவர்களும் வழிபட்ட பெருமாள். ஆனால் காலப்போக்கில் பெருமாளின் ஆலயம் சிதைந்துபோனது. பெருமாளின் திருமேனியும் மண்மூடிக் கிடக்க, அருகிலுள்ள நடராஜபிள்ளைச்சாவடி என்ற ஊரில் வசித்த செட்டியார் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் இருக்கும் இடத்தைக் காட்டி அருளினாராம்.
அதன்படி பெருமாளை அந்த இடத்திலே ஊர்மக்கள் தேட, பெருமாள் வெளிபட்டு அருள்பாலித்தார். இந்தச் செய்தி துளசி மகாராஜனுக்குப் போய்ச்சேர அவன் ஓடிவந்து பெருமாளை வணங்கி அவருக்கு ஒரு கோயிலைக் கட்டினார். இந்தப் பகுதியில் வாழ்ந்த ஜமீன்தார் ஒருவர் கோயிலுக்கு தானமாக நிலங்களை வழங்கியிருக்கிறார்.

ஆலயத்தின் உள்ளே தன் சந்நிதிக்கு இடப்புறம் ஸ்ரீதும்பிக்கை ஆழ்வாரும் ஸ்ரீமகா மாரியம்மனும் அருள்பாலிக்க, வலப்புறத்தில் ஸ்ரீகம்பத்தாழ்வார், ஸ்ரீவசிஷ்ட மகரிஷி ஆகியோர் அமர்ந்திருக்க, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீவரதராஜப்பெருமாள்.
இங்கு பெருமாளுக்கு சூரியனும் சந்திரனுமே இரண்டு கண்களாகத் திகழ்கிறார்கள். பால் அபிஷேகத்தின்போது, பெருமாளின் இடது திருக் கண்ணில் சூரியனும் வலது கண்ணில் சந்திரனும் காட்சி தருவது, வேறெங்கும் காண்பதற்கரிய அற்புதமாகும்.
ஸ்ரீசீதா, ஸ்ரீலட்சுமணர் சகிதம் ஸ்ரீராமர் தெற்கு நோக்கி தனிச்சந்நிதியில் அருள்கிறார். இங்கு இரண்டு ஆஞ்சநேயர்கள். ஒருவர் வீர ஆஞ்சநேயர், மற்றவர் இலங்கையிலிருந்து பக்தர் ஒருவர் மூலம் வந்துசேர்ந்தவர் என்கிறார்கள். இருவருமே சிறந்த வரப்பிரசாதி! ஸ்ரீசக்கரத்தாழ்வார், கொடிமரமாக ஓங்கி நிற்பது இத்தலத்தின் சிறப்பம்சம். கோயிலின் பின்புறம் ஆதிஷேசன் அருள்பாலிக்கிறார்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள், தொடர்ந்து மூன்று சனிக்கிழமைகள் இங்கு வந்து, 48 முறை பெருமாளை வலம்வந்து வணங்கினால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல், கன்னிப்பெண்கள் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் ஆதிசேஷனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால், திருமண வரம் கைகூடும். இப்படி இங்கு வந்து வழிபடுவதால், பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் போன்ற தீவினைகள் அனைத்தும் விலகும்; எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ஐப்பசி - துலா மாத துலாப்பார விழாவின்போது, கன்னிமாந்துறையில் நீராடினால், கங்கையில் நீராடிய புண்ணியம் வாய்க்கும் என்கிறார்கள்.

இத்தகைய சிறப்பும் மகிமையும் வாய்ந்த இந்தத் தலத்துக்கு வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று வாருங்கள். காவிரிக்கு வழிகாட்டிய பெருமாள், நம் நல்வாழ்வுக்கும் வழிகாட்டுவார்.
எப்படிச் செல்வது? : மயிலாடுதுறை - பூம்புகார் பிரதான சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது, கிடாரங்கொண்டான் மின்நிலைய பேருந்து நிறுத்தம். இதன் அருகிலேயே ஆலயம் உள்ளது




















