Rahul Tejaswi Ego War; மதுவிலக்கு ரத்து விவாதம்; Bihar-ல் முந்தும் NDA?|Ramsar S...
திருச்செந்தூர்: தாராபிஷேகம், இலைவிபூதி; மனநிம்மதியும் பூரண ஆயுளும் தரும் முருகனின் திருக்கோயில்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். சூரபத்மனோடு போர் செய்த இடம் திருச்செந்தூர் என்கிறது புராணம். சூரபத்மனோடும் அவன் படைகளோடு முருகப்பெருமான் ஆறுநாள்கள் போர் செய்து சூரனை அழித்து அருள் செய்த தலம் திருச்செந்தூர். இத்தலத்தின் சிறப்புகள் அநேகம். வாருங்கள், அந்த அற்புதத் தலம் குறித்து தியானிப்போம்.
சூரபதுமனிடமிருந்து உலகையும் உயிர்களையும் தேவர்களையும் காப்பதற்காக சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து முருகப்பெருமானைப் படைத்தார் என்கிறது புராணம். முருகப்பெருமான் சூரனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினார். அப்படி அவர்கள் இருவருக்கும் யுத்தம் நடந்த தலம் திருச்செந்தூர் என்கிறது தலபுராணம்.

எனவே இதற்கு ஜயந்திபுரம் என்றும் கடல் அலைகள் வருடுவதால் திருச்சீரலைவாய் என்றும், அழைக்கப்படுகிறது திருச்செந்தூர். கபாடபுரம், அலை வாய், கந்தமாதன மலை, திருச்செந்தில் என்ற வேறு பெயர்களும் உண்டு.
அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார் முருகப் பெருமான் என்கின்றன புராணங்கள்.
செந்திலாண்டவர் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு - தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. இதன் பிரதான வாயில் தெற்கு நோக்கியது.
மூலவரான செந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில் குமார தந்திர முறையிலும், சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. மூலவர் செந்திலாண்டவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதிகம். எனவே அனைத்துத் தலங்களிலும் வேலோடும் அருகில் வள்ளி தேவசேனாவோடும் அருள்பாலிக்கும் முருகன் இத்தலத்தில் கையில் மலர் ஏந்தியவராகக் காட்சிகொடுக்கிறார்.
அஷ்ட லிங்கங்கள்
கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப் பெறும்.
அஷ்ட லிங்கங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. காரணம், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.
மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிர சம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன.
உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.
மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்யும் தாராபிஷேகம் மிகவும் விசேஷமானது.

அகிலம் போற்றும் ஆறுமுக அர்ச்சனை
ஆறுமுகப் பெருமானுக்கு நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.
திருச்செந்தூர் தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. சூரபதுமன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.
திருச்செந்தூரில் முருகப்பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் தீர்வதோடு குருவருளும் பரிபூரணமாக விளங்கும் என்கிறார்கள்.
இத்தல சண்டிகேஸ்வரருக்கு புதிய மாலைகளை சாத்த மாட்டார்கள். மூலவருக்கு சாத்திக் கழித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.
மூலவர் சந்நிதி இரவில் அடைக்கப்பட்டதும் இங்கு அமைந்துள்ள பைரவர் சந்நிதியில் சாவியை வைக்கிறார்கள். இவரது சந்நிதியில் உள்ள விளக்கில் இருந்து வேறொரு விளக்கில் அக்னியை ஏற்றிச் சென்றுதான் மடைப்பள்ளி அடுப்பைப் பற்ற வைக்கிறார்கள். இரவில் இவருக்கு வடை நைவேத்தியம் செய்யப்படுகிறது.

கவலைபோக்கும் கந்த சஷ்டி
திருச்செந்தூர் என்றதும் அனைவரின் நினைவிற்கும் வருவது சூரசம்ஹாரம். கந்த சஷ்டித் திருவிழாவை ஒட்டி பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து விரதம் மேற்கொள்வார்கள். கந்த சஷ்டியின் முதல் ஐந்து நாள்கள் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். யாக சாலை பூஜைகளும் சிறப்பாக நடைபெறும்.
கந்த சஷ்டியின் நிறைவு நாளான 6 ம் நாள் சூர சம்ஹாரம் நடைபெறும். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் குவிவார்கள்.
சஷ்டி தினத்தில் விரதம் இருந்து திருச்செந்தூர் முருகனை மனதார வழிபட்டால் நோய்கள் விலகும். பயம் நீங்கும். எதிரிகளின் தொல்லை முற்றிலும் விலகும்.
மேலும் இந்த முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். திருச்செந்தூர் செவ்வாய் பரிகாரத் தலம் என்பதால் குடும்ப வாழ்க்கை நிம்மதி அடையும். பொன் பொருள் சேரும். மனநிம்மதியும் தீர்க்க ஆயுளும் கிடைக்கும்.




















