சமீபமாக நடிகர் விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிப்பவர்களைக் கொஞ்சம் கடுமையான தொனியில் பதிலடி கொடுத்து வருகிறார் நடிகர் தாடி பாலாஜி.
தமிழக வெற்றிக் கழகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜன் கூறிய சில கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்த போது, இதற்கு முன் புதுச்சேரியில் கவர்னராக இருந்ததால் ‘விஜய் பேச்சை தண்ணீரில்தான் எழுத வேண்டுமெனச் சொல்கிறார் போல’ என விமர்சனம் செய்தார்.
மேலும் சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினி காந்த் குறித்தும் இவர் பேசிய சில வார்த்தைகளால் கொதித்துப்போய் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
த.வெ.க.வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தைச் சந்தித்தது முதலே விஜய் கட்சியில் பாலாஜி சேர்ந்து விட்டார் என்ற தகவலும் பரவி வருகிறது.
``புஸ்ஸி ஆனந்த் திடீர்னு ஒருநாள் கூப்பிட்டார். போனா ‘பாலாஜியை மாநாட்டுக்கு ஒர்க் பண்ணச் சொல்லுங்க’னு விஜய் சொல்லியிருக்கார்னு சொன்னார். அப்ப இருந்தே அந்த வேலைகளைத் தொடங்கிட்டேன். மாநாட்டுக்கு லட்சக்கணக்கான பேர் வர இருக்காங்க. மாநாட்டுல தளபதி பேசறதைக் கேக்க எல்லாரும் ஆவலா இருக்காங்க. அந்த மாநாட்டுக்குப் பிறகு பாருங்க, தமிழக வெற்றிக் கழக கொடிதான் எங்கயும் பறக்கப் போகுது’’ என பாலாஜியுமே சில இடங்களில் பேசிய செய்திகள் மீடியாவில் வெளி வந்தன.
எனவே, ’தொடர்ந்து திமுக அனுதாபியாக இருந்த பாலாஜி எப்படி விஜய் பக்கம் போனார்’ என சமூக வலைதளங்களில் பலரும் விவாதிக்கத் தொடங்க, நாம் பாலாஜியிடமே பேசினோம்.
‘’மாநாட்டுப் பணிகள் எப்படிப் போயிட்டிருக்கு. புதுக்கட்சி அனுபவம் எப்படி இருக்கு’ என நாம் முடிப்பதற்குள்ளேயே, ‘நான் விஜய் சார் கட்சியிலெல்லாம் சேரலைங்க. மீடியாவுல அவங்க இஷ்டத்துக்கு எதையாச்சும் எழுதிட்டிருக்காங்க.
புஸ்ஸி ஆனந்த் கூப்பிட்டார். போய் பார்த்தேன். மாநாடு தொடர்பா சில வேலைகளைப் பாலாஜிகிட்டக் கொடுங்கனு சார் சொல்லியிருக்கார்னு சொன்னார். சந்தோஷமா செய்றேன்னு சொன்னேன். சில வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். அவ்ளோதான். அதுக்குள் என்னவெல்லாமோ எழுதறாங்க.
இப்ப தெளிவா சொல்றேன் சார். நான் அந்தக் கட்சியில உறுப்பினராகவெல்லாம் சேரல. இதைச் சொல்லிடுங்க’ என முடித்துக் கொண்டார் அவர்.