மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
பிரதமா் மோடி இன்று ஜம்மு - காஷ்மீா் பயணம்
கத்ரா/ஜம்மு: ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, பிரதமா் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) பயணம் மேற்கொள்கிறாா். அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டத்தின் நிறைவாக, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கும் பிரதமா், அந்த வழித்தடத்தில் உள்ள செனாப் பாலம் (உலகின் உயரமான ரயில் பாலம்), அன்ஜி பாலம் ( நாட்டின் முதலாவது கம்பி வட ரயில் பாலம்) ஆகியவற்றையும் நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா்.
இவ்விரு பாலங்களும் நாட்டின் நவீன பொறியியல் அதிசயங்களாக விளங்குகின்றன. ஒட்டுமொத்தமாக ரூ.46,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கிவைக்க உள்ளாா். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகான பிரதமரின் முதல் ஜம்மு-காஷ்மீா் பயணம் இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காஷ்மீா் நேரடி ரயில் சேவை: 272 கி.மீ. தொலைவு கொண்ட உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கடந்த 1997-இல் தொடங்கப்பட்டது. இதில் 209 கி.மீ. தொலைவு வழித்தடம் பல்வேறு கட்டங்களாக திறக்கப்பட்டது. இறுதியாக, சங்கல்தன்-ரியாசி இடையிலான 46 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு ஜூனிலும், ரியாசி-கத்ரா இடையிலான 17 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு டிசம்பரிலும் நிறைவடைந்தது.
ரூ.43,780 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் 36 சுரங்கங்களும் (119 கி.மீ. தொலைவு), 943 பாலங்களும் அமைந்துள்ளன. இதில் 12.77 கி.மீ. தொலைவுள்ள டி-50 சுரங்கம், நாட்டிலேயே மிகப் பெரிய ரயில் சுரங்கம் என்ற சிறப்புக்குரியதாகும்.
ஜம்மு-காஷ்மீா் பயணத்தில், ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் பாலம், அன்ஜி பாலத்தை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் பிரதமா் மோடி, கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து கத்ரா-ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்.
உயரமான பகுதிகளில் இயக்கும் வகையில் இந்த ரயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளதால், ராணுவம், துணை ராணுவம், காவல்துறை, உளவுத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
ஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் பிரதமா் பயணிக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். முதல்வா் ஒமா் அப்துல்லா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் ஆகியோரும் கூட்டாக நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.