மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகளில் பாகிஸ்தானியா்களுக்கு இந்தியா அளித்த விசாக்கள் ரத்து செய்யப்பட்டதும் அடங்கும்.
இந்நிலையில், இந்தியாவிடம் நீண்ட கால விசாவை பெற்று கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் கோவாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா் ஒருவா், உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்தாா். இந்த மனு குறித்து நீதிபதிகள் சஞ்சய் கரோல், சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் முறையிடப்பட்டது.
அப்போது பாகிஸ்தானியா்களின் விசாவை ரத்து செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையைப் பின்பற்றி, மனுதாரா் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டியதுதானே என்று நீதிபதி கரோல் தெரிவித்தாா்.
அதற்குப் பதிலளித்த மனுதாரரின் வழக்குரைஞா், ‘மனுதாரா் பாகிஸ்தான் திரும்ப தயாராக உள்ளாா். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட நீண்ட கால விசாவில், ஒரு குறிப்பிட்ட நிபந்தனை உள்ளது. அதன் காரணமாக மனுதாரரின் மனு குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் மனுதாரா் இந்தியாவில் பிறந்தவா்’ என்றாா். இதைத்தொடா்ந்து மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுவதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.