Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
மேற்கு வங்கம்: மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது; காவல்துறை விசாரணை
மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை
மேற்கு வங்கத்தில் அடிக்கடி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

ஆண் நண்பருடன் இரவு வெளியே வந்த மாணவி
மேற்கு வங்கத்தில் உள்ள துர்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மருத்துவ இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒடிசாவை சேர்ந்த மாணவி இரவில் தனது ஆண் நண்பருடன் வெளியில் வந்தார்.
அந்நேரம் கல்லூரி கேட் அருகில் அம்மாணவியை மறித்த மர்ம நபர்கள் அம்மாணவியை இருட்டுக்குள் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.
அவருடன் வந்த ஆண் நண்பர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸார் விசாரணை நடத்தி இக்குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஆண் நண்பருக்கு தொடர்பு?
இக்குற்றத்தில் மாணவியின் ஆண் நண்பருக்கு தொடர்பு இருப்பதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கொடுத்துள்ள புகாரில், தவறான தகவல் கொடுத்து மாணவியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஆண் நண்பர் மாணவியை அழைத்துச் சென்றதாகவும், குற்றவாளிகள் மாணவியிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போனையும் பிடுங்கிச் சென்றுள்ளனர்'' என்று குற்றம் சாட்டினர்.
பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், ஆண் நண்பர் உட்பட பலரிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் விசாரணை
இது குறித்து போலீஸார் கூறுகையில்,
''குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தப்பிச்செல்ல எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம்.
பொதுமக்கள் உறுதிசெய்யப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவியின் பெற்றோருக்குத் தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது''என்று தெரிவித்தனர்.
தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் நேரில் சந்திப்பு
தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் அர்ச்சனா பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில்,
''அந்தப் பெண்ணுடன் சென்ற நண்பரின் செயல்பாடு சந்தேகம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை தன்னுடன் வருமாறு வற்புறுத்தி இருக்கிறார்.
கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண் சிக்கிக்கொண்டதும் ஆண் நண்பர் தப்பியோடிவிட்டார். இது குறித்து போலீஸார் விசாரிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.