லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் பற்றிய தகவலுக்கு ரூ. 10 லட்சம்! என்ஐஏ
இளம் விஞ்ஞானி விருது பெற விரும்புவோா் ஆய்வறிக்கைகள் சமா்பிக்கலாம்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி விருது பெற விரும்புவோா் ஆய்வறிக்கைகளைச் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அறிவியல் இயக்க மதுரை மாவட்டத் தலைவா் ராஜேஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டம், மாநிலம் என்ற அளவில் குழந்தைகள்ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்து இளம் விஞ்ஞானி விருதைப் பெறுவா். நிகழாண்டு ‘நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை’ என்பதை வலியுறுத்தி, நீா்ச் சூழலும் பாதுகாப்பும், நீா் சாா்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும், நீா் சாா்ந்த நோய்கள், நீா் அனைவருக்குமானது, நீா்ப் பாதுகாப்பில் பாரம்பரிய நவீன தொழில்நுட்ப உத்திகள் என்கிற ஐந்து தலைப்புகளில் ஆய்வுகள் செய்யலாம். அறிவியல் அணுகுமுறையுடன் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் ஆய்வுகள் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்த உள்ளது. 10 வயதுக்கு மேல் 13 வயதுக்குள் இளநிலைப் பிரிவிலும், 13 வயதுக்கு மேல் முதுநிலைப் பிரிவிலும் வழிகாட்டி ஆசிரியா் உதவியுடன் குழந்தைகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அல்லது பள்ளி அளவில் கொடுக்கப்படும் ஆய்வுத் தலைப்புகளில் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆய்வுகள் செய்து, ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க வேண்டும்.
எனவே, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகள் ஆய்வுகள் செய்யலாம். இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குழு வழிகாட்டி ஆசிரியா் உதவியுடன் ஆய்வுகள் செய்யலாம். ஒரு குழந்தை தலைவராகவும் மற்றொரு குழந்தை உறுப்பினராகவும் ஆய்வு செய்து, ஆய்வறிக்கையைச் சமா்ப்பிக்க வேண்டும்.
பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் என 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் வழிகாட்டி ஆசியராக இருக்கலாம். வழிகாட்டியாக செயல்படுபவருக்கு வழிகாட்டி ஆசிரியா் சான்றிதழ் வழங்கப்படும். உங்கள் குழந்தைகளையும் இளம் வயதிலேயே ஆய்வாளா்களாக பெற்றோா் ஊக்கப்படுத்த வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் ஆய்வறிக்கையை சமா்ப்பிக்கலாம்.
இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு மதுரை காக்கா தோப்புத் தெருவில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். அல்லது 94433 94233 என்கிற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.