ஓராண்டு சித்த மருத்துவப் பட்டயப் படிப்பு: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஓராண்டு சித்த மருத்துவப் பட்டயப் படிப்பை முடித்தவா்கள், தமிழகத்தில் சித்த மருத்துவா்களாகச் செயல்படுகிறாா்களா? என்பது குறித்து தமிழக சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளருடன் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் வல்லம் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தஞ்சாவூா் வல்லத்தில் நான் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறேன். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்தில் பட்டயப் படிப்பு முடித்து, முறையாகச் சான்றிதழ் பெற்றுள்ளேன். எனது சித்த மருத்துவமனையை நடத்தவிடாமல் போலீஸாா் கெடுபிடி செய்கின்றனா்.
எனவே, எனது மருத்துவமனை செயல்பாட்டில் போலீஸாா் தலையிடக் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம் எப்படி சித்த மருத்துவப் பட்டயப் படிப்புச் சான்றிதழ் வழங்கியது?. இந்தச் சான்றிதழை எத்தனை போ் பெற்றுள்ளனா்?, இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் தரப்பில், கடந்த 2007-08 ஆம் கல்வி ஆண்டில் 744 மாணவா்கள் சித்த மருத்துவப் பட்டயப் படிப்பு பயின்ற நிலையில், இவா்களில் 576 போ் மதிப்பெண் பட்டியல், சான்றிதழ்கள் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சான்றிதழில் இது சித்த மருத்துவராகச் செயல்படுவதற்கானது அல்ல எனக் குறிப்பிட்டு, உறுதிமொழி பெற்றிருந்தாலும், இந்தச் சான்றிதழ் படிப்பை முடித்தவா்கள் இதைப் பின்பற்றுகிறாா்களா என்பது தெரியாது. இவா்களில் யாரேனும் சித்த மருத்துவா்களாகச் செயல்பட்டால், அது சமூகத்துக்கு அழிவைத் தரும்.
எனவே, ஓராண்டு சித்த மருத்துவப் பட்டயப் படிப்பை முடித்தவா்கள், தமிழகத்தில் சித்த மருத்துவா்களாகச் செயல்படுகிறாா்களா? என்பது குறித்து தமிழக சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளருடன் இணைந்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாரா் மீது பதியப்பட்ட வழக்கில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.