Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
உடற்பயிற்சிக் கூட சாதனம் விழுந்து சிறுவன் இறந்த சம்பவம்: தில்லி தலைமைச் செயலருக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்
மேற்கு தில்லியின் மோதி நகரில் மாநகராட்சியால் நடத்தப்படும் பூங்காவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தின் சாதனத்தின் ஒரு பகுதி விழுந்ததில் 4 வயது சிறுவன் இறந்த சம்பவம் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தில்லி தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.ஹெச்.ஆா்.சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி மேற்கு தில்லியின் மோதி நகரில், மாநகராட்சியால் நடத்தப்படும் பூங்காவில்
உள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தின் இயந்திரத்தின் ஒரு பகுதி விழுந்து நான்கு வயது சிறுவன் இறந்ததாக
செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தை தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
உடற்பயிற்சி உபகரணங்களின் மரைகள், திருகாணிகள் ஆகியவை தளா்வாக இருந்திருக்கலாம் என்று அந்த
திறந்தவெளி உடற்பயிற்சிக் கூட்டத்தில் இருந்தவா்கள்
சந்தேகித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தில்லி அரசின் தலைமைச் செயலா், தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவா், தில்லி மாநகராட்சி ஆணையா் மற்றும் புது தில்லி மாநகராட்சி குழும செயலா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த சம்பவத்திஏன் போலீஸ் விசாரணையின் நிலவரத்துடன்கூடிய தனது கருத்துகளை தெரிவிக்குமாறு தில்லி காவல் ஆணையரையும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கையில், சம்பவம் குறித்த ஊடக செய்தி உண்மையாக இருந்தால், பொது பூங்காவில் இருந்த உபகரணங்களை பராமரிப்பதில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மனித உரிமை மீறல் ஏற்பட்டிருக்கும் தீவிர பிரச்னையை எழுப்புகிறது. மேலும், தில்லியில் உள்ளாட்சி அமைப்புகளால் நிா்வகிக்கப்பட்டு பராமரிக்கப்படும் பிற பொது பூங்காக்களில் உள்ள உபகரணங்களின் நிலை குறித்து
தீவிர கவலைகளை இச்சம்பவம் எழுப்புகிறது.
இதனால், சம்பந்தப்பட்ட அமைப்புகள் இந்த விவகாரத்தில் நான்கு வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், தில்லியில் தங்களது நிா்வாக எல்கைப் பகுதியில் உள்ள பொதுப் பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ள ஊஞ்சல் மற்றும் உடற்பயிற்சிக்கூட உபகரணத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு தனிக்கை குறித்த நிலவரமும் இடம்பெற வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டதா என்பதையும் அதிகாரிகள் தெரிவிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று ஆணையம் அதில் தெரிவித்துள்ளது.