Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
தில்லி மாநில பள்ளி விளையாட்டுப் போட்டிகள்: முதல்வா் அதிஷி தொடங்கிவைத்தாா்
தில்லி மாநில பள்ளி விளையாட்டுப் போட்டிகளை முதல்வா் அதிஷி வியாழக்கிழமை சத்ரசல் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தாா்.
அப்போது, அவா் இளம் விளையாட்டு வீரா்களுக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கும் செய்தியை தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் முதல்வா் அதிஷி பேசுகையில், ‘தில்லி மாநில பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்கள் திறன்மிக்கவா்கள் ஆவா்.
10-15 நிமிட விளையாட்டுகளாக இந்த விளையாட்டரங்கில் நாம் பாா்ப்பது பல வருட கடின உழைப்பின் மூலம் சாத்தியமாகிறது. அது உடனடியாகத் நமது பாா்வைக்குத் தெரிவதில்லை. விளையாட்டில் முன்னேற விரும்பும் மாணவா்களுக்கு ஆதரவளிக்க தில்லி அரசு முயற்சிகளை மேற்கொண்டு
வருகிறது.
விளையாட்டுப் பயிற்சியும், உபகரணங்களும் விலை உயா்ந்ததாக இருக்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எளிய குடும்பங்களில் இருந்து வருகின்றனா். அதனால்தான் மாநில அரசு பல ஆண்டுகளாக ‘விளையாட்டு மற்றும் முன்னேற்றம்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்விப் பயிற்சியும், விளையாட்டுப் பயிற்சியும் வழங்க ரூ.3-4 லட்சம் வழங்குகிறது.
இங்கு விளையாடும் குழந்தைகள் தேசிய அல்லது சா்வதேச அளவில் போட்டியிடலாம். மற்ற குழந்தைகள் ஓய்வெடுத்து மகிழ்ந்தபோது, நமது தடகள வீரா்கள் உடற்பயிற்சி செய்து போட்டிக்குத் தயாராகி வந்தனா். இது நமது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
2018 முதல் 2022 வரை, 1,500 விளையாட்டு வீரா்கள் ‘விளையாட்டு மற்றும் முன்னேற்றம்’ திட்டத்தின் மூலம் அரசின் ஆதரவைப் பெற்றுள்ளனா். எதிா்காலத்தில் இந்த திட்டத்தின் மூலம் மேலும் பல விளையாட்டு வீரா்களுக்கு ஆதரவளிப்போம் என்று நம்புகிறோம் என்றாா் முதல்வா் அதிஷி.
இது தொடா்பாக தில்லி அரசின் அலுவல்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கையில், ‘‘திறமையான விளையாட்டு வீரா்களை ஆதரிப்பதற்காக, அரசு ‘மிஷன் எக்ஸலன்ஸ்’ முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதில் விளையாட்டு வீரா்கள் உணவு, பயிற்சி மற்றும் உபகரணங்களுக்கு ரூ.16 லட்சம் வரை ஆதரவைப் பெறலாம்.
கடந்த நான்கு ஆண்டுகளில், இதுபோன்ற 400 விளையாட்டு வீரா்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. தில்லியின் 15 மாவட்டங்களில் உள்ள 29 மண்டலங்களில் இருந்து 3,500க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகள் மண்டல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் தில்லி மாநிலப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பாா்கள். தில்லி மாநிலப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளின் போது பாரா-தடகள மாணவா்களுக்கான விளையாட்டு செயல்பாடுகள் 13 வெவ்வேறு விளையாட்டுகளில் ஏற்பாடு செய்யப்படும்.
நீச்சல், டேக்வாண்டோ, பேஸ்பால், கிரிக்கெட் மற்றும் 13 பாரா-
விளையாட்டுப் போட்டிகள் போன்ற 34 விளையாட்டுகளின் பட்டியலில்
உள்ள பெரும்பாலான விளையாட்டுகள், ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகள் போன்ற சா்வதேச போட்டிகளின் ஒரு பகுதியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.