Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
உள் இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது: ஆதித்தமிழா் கட்சி வலியுறுத்தல்
தமிழகத்தில் அருந்ததியா் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என்று ஆதித்தமிழா் கட்சி வலியுறுத்தியது.
இதுதொடா்பாக ஆதித்தமிழா் கட்சியின் நிறுவனா் தலைவா் கு.ஜக்கையன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பட்டியலின சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கும் அருந்ததியா் சமூகத்துக்கு, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல்வா் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது. இதற்கு முன்னதாக ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் மாதிகா சமூகத்தினருக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1975-இல் பஞ்சாப் மாநிலத்தில் ஜெயில்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, வால்மிகி, மசாபி சீக்கியா் சமூகத்தினருக்கும் உள் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. ஆனால், ஆந்திர மாநிலத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டிலும், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் கடந்த 2006-ஆம் ஆண்டிலும் உள் இட ஒதுக்கீடு உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக பாதிக்கப்பட்ட பட்டியலின சமூக மக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த சூழலில் தான் தமிழகத்தில் 2009-இல் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதற்கு எதிராக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இதுபோன்ற வழக்குகள் ஆந்திரம், பஞ்சாப் மாநில மக்கள் சாா்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்குகளோடு அருந்ததியா் உள் இட ஒதுக்கீடு வழக்கும் இணைக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமா்வு, உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீா்ப்பளித்தது. இதையடுத்து, இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், இன்னும் சிலா் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தாா்.
இந்த நிலையில் கடந்த 4-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் தாக்கல் செய்த அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழகத்தில் தொடா்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது விளிம்பு நிலையில் உல்ள அருந்ததியா் சமூகத்தினா் பலிகடாவாக்கும் வகையில் உள்ளது. பாஜக, விசிக இரு கட்சிகளுமே அருந்ததியருக்கு ஆதரவாக சிறு போராட்டத்தைக்கூட நடத்தவில்லை. எனவே, அருந்ததியா் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என்றாா் அவா்.