மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.
சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்தவும், இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் ஏழு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன.
திமுகவின் கனிமொழி தலைமையிலான குழு உள்பட ஏழு எம்.பி.க்கள் தலைமையிலான குழுக்களும் கடந்த மே 21-ஆம் தேதிமுதல் உலகெங்கிலும் 33 நாடுகளின் தலைநகரங்களுக்குச் சென்று இந்தியாவுக்கு ஆதரவு திரட்டின.
இந்த நிலையில், வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு இன்று(ஜூன் 3) சென்னைக்கு திரும்பிய திமுக எம்.பி. கனிமொழி தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அன்னாரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதன்பின்,செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: ”எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது... பல நாடுகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென ஒவ்வொரு நாடும் புரிந்து கொண்டிருக்கின்றது.
பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒவ்வொரு நாடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் இந்தியாவுக்கு துணை நிற்கின்றனர். மேற்கண்ட இந்த செய்தியைத்தான் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பியுள்ளபோது, கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.