கழுகார்: `சைலன்ட் மோடு மாண்புமிகு; வேலையைத் தொடங்கிய கம்பெனி டு அண்ணன் வந்ததும் மாநாடு?’
மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் அந்த மாண்புமிகு, இனிமேல் எந்த வம்பு தும்பிலும் சிக்கிவிடக் கூடாது, யார் கண்ணையும் உறுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம். அதனால்தான், இழந்த பொறுப்புகளெல்லாம் தன்வசம் வந்த பிறகும், பழைய தடாலடிகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு அமைதியாக வலம்வந்துகொண்டிருக்கிறார். ஆனால், இதுவரை அமைதியாக இருந்த அவருக்கு நெருக்கமான கம்பெனி ஆட்களோ, “அதான் அண்ணன் வந்துட்டாருல்ல... பழையபடி எங்களுக்கான பங்கு வந்துவிட வேண்டும்” என மீண்டும் அடாவடியில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்களாம். அவர்களது ‘TN 47’ பதிவு எண்கொண்ட வாகனங்கள் தமிழ்நாடு முழுக்க மீண்டும் வலம்வரத் தொடங்கியிருப்பதால், கடுப்பான சீனியர்கள், தலைமைக்குப் புகாரனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்!
ஆடியோ விவகாரத்திதால் `கதைசொல்லி’ தலைவர்மீது அப்செட்டில் இருக்கும் பெண் நிர்வாகியைத் தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறது ஆளும் தரப்பு. ‘மீனவரணியில் மாநிலப் பொறுப்பு தருகிறோம்’ என்று அழைத்தவர்களிடம், ‘அப்படியே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கொடுத்தால் இடமாற்றம் குறித்து யோசிப்பதாக’ பெண் நிர்வாகி தரப்பிலிருந்து பதில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘எங்கள் கட்சியில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை’ என்று ஆளுங்கட்சி மறுத்துவிட, ‘சீட்டை உறுதிசெய்தால் வருகிறேன்’ எனப் புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் தரப்புக்கு தூதுவிட்டிருக்கிறார். மாநாட்டுக்குப் பிறகாவது அங்கிருந்து பாசிட்டிவ்வான பதில் வருமா எனக் காத்திருக்கிறாராம் பெண் நிர்வாகி!
மேற்படிப்புக்காக லண்டனுக்குச் சென்றிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, நவம்பர் மாதம் நாடு திரும்பவிருக்கிறார். ‘அப்படி அவர் ஊர் திரும்பியதும், கோவையில் மிகப்பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்’ என்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள். ஆனால் கமலாலய சீனியர்களோ, “உண்மையில் அப்படி எந்த முயற்சியும் நடக்கவில்லை. தான் ஊரில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தன்னைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தன் ஆதரவாளர்கள் மூலம் இப்படிக் கிளப்பிவிட்டிருக்கிறார் அண்ணாமலை. அவர் வந்தவுடன் மாநாடு நடக்காது... உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டாத அவருடைய ஆதரவாளர்கள் மீதான விசாரணைதான் நடக்கும்” என்கிறார்கள்!
நெல்லை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் டெபாசிட் இழந்ததற்கு, சொந்தக் கட்சி முக்கியப் புள்ளியின் உள்ளடி வேலைகளும் ஒரு காரணம் என்ற புகாரால் அவர்மீது கடுப்பிலிருந்தார் எடப்பாடி பழனிசாமி. ‘நம் வேட்பாளரை விட்டுவிட்டு நயினாருக்கா வேலை பார்க்கிறீர்கள்?’ என்று அந்த நிர்வாகியை அவர் கண்டித்ததாகவும் சொல்லப்பட்டது. அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில், 53-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்வுக்காக நெல்லைக்கு வந்த எடப்பாடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அசத்திவிட்டார் அந்தப் புள்ளி. “இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் கட்சிக்குள் புயலை கிளப்பிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், எடப்பாடிக்கும் இது போன்ற கூட்டம் தேவைப்பட்டதால், எடப்பாடியும் வழக்கத்துக்கு மாறாக உற்சாகத்துடன் இருந்திருக்கிறார். எப்படியோ காலை வாரியவரே எடப்பாடியின் கவனத்தை ஈர்த்துவிட்டார்” என்கிறார்கள் ர.ர-க்கள்!
தலைநகரில் சமீபகாலமாக போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்திருப்பதோடு, குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என சீனியர் அதிகாரிக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. ‘இது குறித்து எந்த ரிப்போர்ட்டும் எனக்கு வரவில்லையே?!’ என்று பதறியவர், ‘ஒவ்வொரு பகுதி காவல் நிலையத்தையும் கண்காணிக்கும் உளவுப் பிரிவினர் என்ன செய்கிறார்கள்?’ என்ற விசாரணையில் இறங்கியிருக்கிறார். விசாரணையில், ‘உளவுப் பிரிவு அதிகாரிகள் காவல் நிலைய அதிகாரிகளுடன் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, அவர்கள் சொல்வதையே ரிப்போர்ட்டாக மேலிடத்துக்கு அனுப்பிவைத்துவிடுகிறார்கள்’ என்று தெரியவந்திருக்கிறது. கடுப்பான அவர், தற்போது உளவுப் பிரிவைக் கண்காணிக்க, ஒரு ஸ்பெஷல் டீமை நியமித்திருக்கிறார் என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88