தில்லி தேர்தல்: அரவிந்த் கேஜரிவால் தோல்வி!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தோல்வி அடைந்துள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ல் நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை (பிப்.8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 13 சுற்றுகளாகத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டது.
இந்த நிலையில், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தோல்வியைத் தழுவியுள்ளார்.
பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் கேஜரிவால் தோல்வியடைந்தார். பர்வேஷ் 30,088 வாக்குகள், ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவால் 25,999 வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட தில்லி முதல்வர் அதிஷி 52,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை முன்னிலை வகித்து வந்த நிலையில் இறுதிச் சுற்றுகளின்போது பின்னடைவைச் சந்தித்துத் தோல்வியடைந்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை பெற்ற நிலையில், பாஜக வெற்றி பெற்றதாகவும், ஆத் ஆத்மி கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கண்டோன்மென்ட் மற்றும் கோண்ட்லி ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறாதது துரதிருஷ்டவசமானது.
தேசிய தலைநகரில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. பாஜக ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தை ஒரு பண்டிகையை போன்ற கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள பாஜக கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.