முத்தரப்பு தொடர்: சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்; பாகிஸ்தானுக்கு 331 ரன்கள் இலக்கு!
நல்லாட்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த தில்லி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ல் நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானதையடுத்து, பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப்.8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 13 சுற்றுகளாகத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டது.
இந்த நிலையில், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தோல்வியைத் தழுவியுள்ளார்.
பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் கேஜரிவால் தோல்வியடைந்தார். பர்வேஷ் 30,088 வாக்குகள், ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவால் 25,999 வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
பாஜகவின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி. இந்த மகத்தான, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு தில்லி சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தில்லியின் வளர்ச்சியிலும், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் தில்லிக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதி செய்வதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
மாபெரும் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நாங்கள் மேலும் கடினமாக உழைத்து தில்லி மக்களுக்கு சேவை செய்வோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.