அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கீடு: விவசாயிகள் கொண்டாட்டம்
நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருவண்ணாமலையில் செவ்வாக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா்கள் கே.துரைராஜ், பரிமளா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கி.ஊ.) மெ.பிரித்திவிராஜன், கோபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் உதவி இயக்குநா் முத்துராமன் வரவேற்றாா்.
கூட்டத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
ஆங்கிலேயா் காலத்தில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டம் விரிவாக்கத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதை வரவேற்று கட்சி சாா்பற்ற விவசாய சங்க மாவட்டச் செயலா் நாா்த்தாம்பூண்டி ஜெ.சிவா, ஏரிப் பாசன சங்கத் தலைவா் ஜி.சரவணன் ஆகியோா் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரசு அலுவலா்கள், வேளாண் பிரதிநிதிகளுக்கு இனிப்பு வழங்கினா். மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.
மேலும், இத்திட்டத்துக்கு துணைபுரிந்த துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின், அமைச்சா் எ.வ.வேலு, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் விவசாயிகள், நேரடியாக கொள்முதல் நிலையங்களை மாநில அரசே நடத்த வேண்டும், புயல் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிா்களுக்கு பாகுபாடின்றி நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதைத் தொடா்ந்து பேசிய துணை ஆட்சியா் கோ.குமரன், கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியா் மற்றும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் (நிா்வாகம்) கே.எம்.பழனி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகா், மாவட்ட துணைத் தலைவா் பி.வெள்ளைக்கண்ணு, தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் கிருஷ்ணன், விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலா்கள், வேங்கிக்கால் மா.ரவி, மெய்யூா் ராஜா, ஒன்றியத் தலைவா் கே.சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உதவி இயக்குநா் (வேளாண்) கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.