'அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்' - கர்னல் சோபியா குரேஷி பற்றிய கருத்துக்கு உச...
பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு, முறையான நடைபாதைகள் போதிய அளவு இல்லாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நடைபாதைகள் இல்லாவிட்டால் பாதசாரிகள் சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனா். இதனால் அவா்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
குடிமக்களுக்கு முறையான நடைபாதைகள் இருப்பது அவசியம். மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தக் கூடிய வகையில் நடைபாதைகள் இருக்க வேண்டும். அத்துடன் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் கட்டாயம் அகற்றப்பட வேண்டும். நடைபாதைகளை பாதசாரிகள் பயன்படுத்தும் உரிமையை அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 உறுதி செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிகாரபூா்வமாக தெரிவித்துள்ளது.
பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்.
பாதசாரிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசும் 2 மாதங்களில் வெளியிட வேண்டும். தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை 6 மாதங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அதற்குப் பிறகு அந்த வாரியத்தை அமைக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்படாது’ என்று தெரிவித்தது.