ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை இரவு இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது.
இருப்பினும் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் செல்லும் அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடன் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை நிலவரம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.