ஆன்லைனில் நோ்காணல் நடத்தி வேலை தருவதாக பணமோசடி: 14 போ் கைது!
வக்ஃப் சட்டம்: மே 20-ல் முழு நாளும் விசாரணை!
வக்ஃப் சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை வருகிற மே 20 ஆம் தேதி முழு நாளும் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் வக்ஃப் சட்டத்தில் திருத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வக்ஃப் சட்டம் தொடர்பாக வருகிற மே 20 ஆம் தேதி முழு நாள் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறினர். அதற்குள் இரு தரப்பினரும் சுருக்கமாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
வக்ஃப் உறுப்பினர்கள், வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களை பரிந்துரைத்தல், வக்ஃப் வாரியத்திற்கு கீழ் அரசு நிலத்தை அடையாளம் காணுதல் ஆகிய திருத்தங்களில் இடைக்கால உத்தரவு தேவையா என்பது குறித்து மே 20 ஆம் தேதி நீதிபதிகள் முடிவெடுக்க உள்ளனர்.
அதுவரை(மே 20) வக்ஃப் சட்டத்தில் திருத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.