IPL 2025 : 'வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அணிகள்!' - பட்லருக்கு ப...
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் 3 பழங்குடியின எம்பி-க்கள் இடைநீக்கம்?
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பி-க்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து, இளம் மவோரி எம்பி ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் (வயது 22), பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி தனது எதிர்ப்பைக் காட்டினார்.
அப்போது, அவருடன் மற்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். இந்தச் சம்பவம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட விடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி, பலரும் ஹனாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நியூசிலாந்து அரசு அமைத்த ஆணையம் நாடாளுமன்றத்தில் ஹக்கா முழக்கம் எழுப்பிய மூன்று உறுப்பினர்களையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது.
அதில், தெ பாத்தி மவோரி எனும் மவோரி பழங்குடியின கட்சியின் துணைத் தலைவர்களான டெப்பி ஞாரெவா பாக்கெர் மற்றும் ராவிரி வைட்டிட்டி ஆகியோரை 21 நாள்களுக்கும் இளம் உறுப்பினர் ஹனாவை 7 நாள்களுக்கும் இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நாடாளுமன்ற எம்பி ஹனா, சபை உறுப்பினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அவர் தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதியதால் குறைந்தபட்ச தண்டனை மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஹக்கா மற்றும் மவோரி பாரம்பரிய நடனங்களில் உறுப்பினர்கள் ஈடுபடுவது புதியதல்ல என்றாலும் அதற்கு சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டிய விதிமுறையுள்ளது.
இந்தப் பரிந்துரைக் குறித்து மவோரி கட்சி கூறுகையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனைகளில் மிகவும் கடுமையானது என்றும் பழங்குடியின மக்கள் எதிர்த்தால், ஆதிக்க சக்திகள் அதிகப்படியான தண்டனையையே விதிப்பார்கள் என்றும் விமர்சித்துள்ளது. மேலும், இது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய எச்சரிக்கை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த இடைநீக்கம் பரிந்துரைக் குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஆளும் பழமைவாத கூட்டணி அரசின் ஆதரவினால் இடைநீக்கம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.