கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி ...
தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் மது போதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை; வெளியேற்றப்பட்ட மருத்துவர்!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக காலை 6 மணி முதலே நோயாளிகள் அனுமதிச்சீட்டு வாங்கி வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆண்கள் சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கக்கூடிய பொது மருத்துவ பிரிவைச் சேர்ந்த மருத்துவர் கண்ணன் என்பவர் பணிக்கு வந்துள்ளார். மது போதையில் இருந்த கண்ணன், புற நோயாளிகள் பிரிவிற்கு ஆண்கள் மருத்துவ பகுதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்ல அப்பிரிவின் நுழைவு கிரில் கேட்டை ஆக்ரோஷமாக அடித்ததுடன், மற்றொரு கேட்டையும் அடித்துள்ளார்.

அப்போதுதான் அவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. தள்ளாடிய அவரை செக்யூரிட்டி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் பிரிவிற்கு சென்று சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் பணியில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனை தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்ற பெண் இந்த சம்பவத்தை பார்த்து தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதுடன் இது தொடர்பாக மருத்துவமனையில் பணியில் இருந்த சக மருத்துவர்களிடம் புகார் தெரிவித்தார்.
இது குறித்து புகார் கூறிய சரோஜாவிடம் பேசினோம், “எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முதியவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்தேன். அப்போது ஒருவர் தள்ளாடிய நிலையில் நடந்து வந்தார். அவரது நடையே அவர் மது அருந்தியிருப்பதை காட்டிக் கொடுத்தது. ஆண்கள் சிகிச்சை பிரிவுக்குச் செல்லும் நுழைவு கிரில் கேட்டை காலால் மிதித்தார். கையால் ஓங்கி தள்ளினார். தகாத வார்த்தைகளால் தனக்குத் தானே பேசினார். இதைப் பார்த்த செக்யூரிட்டி, கிரில் கேட்டை திறந்து அவரை கைத்தாங்கலாக சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றார். மது அருந்திய நிலையிலும், அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். அவரது சிகிச்சை எந்த தரத்தில் இருந்திருக்கும்? இது தொடர்பாக பணியில் இருந்த சக மருத்துவர்களிடம் புகார் கூறினேன். மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உயிருடன் விளையாடக் கூடாது” என்றார்.

இ துகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் சைலேஸிடம் பேசினோம், “புகார் கூறிய பெண்ணின் புகாரின்படி விசாரணை செய்தோம். மருத்துவர் மதுபோதையில் பணிக்கு வந்தது உண்மைதான். உடனடியாக மருத்துவர் கண்ணன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு வேறொரு மருத்துவரான ரமேஷ் என்பவர் பணி அமர்த்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவர் கண்ணன் மீது டீனிடம் புகார் அளித்துள்ளோம். அவருக்கு மெமோ அளிக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.