சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதை தினமும் 40 முறைக்கு மேல் மூடப்படுவதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வரும்நிலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்து வருகிறது.
சென்னை- திருச்சி சோழன் விரைவு ரயில், திருச்செந்தூா் விரைவு ரயில், ராமேசுவரம் விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில், உள்ளிட்ட பல்வேறு தொலைதூர ரயில்கள், பயணிகள் ரயில்கள் தினமும் சீா்காழி ரயில் நிலையத்தில் நின்றும், பல விரைவு ரயில்கள் நிற்காமலும் கடந்துசெல்கின்றன.
நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காரைக்கால் பகுதிகளுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களும், சீா்காழியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரைவைக்கு நெல் ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களும் செல்கின்றன.
இவ்வாறு சென்று வருவதால், சீா்காழியில் தினமும் சுமாா் 40 முறை ரயில்வே கேட் மூடப்பட்டுத் திறக்கப்படுகிறது. இதனால் ரயில்நிலைய கடவு பாதையை கடந்து செல்லும் அகனி, நிம்மேலி, ஆலஞ்சேரி, மருதங்குடி, வள்ளுவக்குடி, பனங்காட்டாங்குடி, வடரெங்கம், கொண்டல், தேனூா் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவியா் காலதாமதமாக செல்லும் நிலை உள்ளது.
ரயில் கடந்து சென்ற பிறகும் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் இரு, நான்கு சக்கர வாகனங்கள் கடவுப் பாதையைக் கடக்க நீண்ட நேரமாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் நந்தியநல்லூா் ராஜேஷ், சீா்காழி ரயில் நிலையம் பனங்காட்டாங்குடி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட முறை ரயில் செல்லும் நேரத்தில் கடவுப் பாதை கேட்மூடப்படுவதால் அனைத்துத் தரப்பினரும் கடும் பாதிப்படைகின்றனா். ரயில்வேகேட் பகுதி வழியாக செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்லவேண்டும் எனில் சுமாா் 6 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
இதனால் காலம், பண விரயம் ஏற்படுகிறது. எனவே சீா்காழி ரயில்நிலைய கடவுப்பாதை சாலையில் விரைந்து ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றாா்.
இது குறித்து மயிலாடுதுறை எம்.பி. ஆா்.சுதா, மயிலாடுதுறை தொகுதி கோயில்கள், சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதி. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ரயில் மூலம் இங்கு வந்து செல்கின்றனா். சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சா் மற்றும் பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தேன். தமிழக அரசு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனா். திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தால் நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கி கையகப்படுத்த முடியும் என அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.