சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!
`பிரதமர் மோடியின் போர் ராஜ தந்திரத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன!’ – புகழும் புதுச்சேரி அதிமுக
புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் பதவியேற்றதில் இருந்து, அரசு அனுப்பும் அனைத்து மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கும் ஒப்புதல் அளித்து வருகிறார். ஆனால் கடந்த சில நாட்களாக கவர்னர், முதலமைச்சர் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அது மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல.

கவர்னரும், முதலமைச்சரும் அமர்ந்து பேசினால்தான் மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல முடியும். புதுவையில் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50% சதவிகித இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக கவர்னரும், முதலமைச்சரும் இணைந்து பெற்றுத்தர வேண்டும். பாகிஸ்தான் மீதான பிரதமர் மோடியின் போர் ராஜ தந்திரத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன. ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஓட்டு வங்கிக்காக அவரை குறை கூறி வருகின்றன.
பாதியிலேயே போரை நிறுத்திவிட்டதாகவும், பிரதமர் மோடிதான் அதற்கு காரணம் என முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். இது தேசத்திற்கும், ராணுவ நடவடிக்கைக்கும் அரசின் போர்க்கால நடவடிக்கைக்கும் எதிரானது. பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். புதுவை அரசு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்தினாலும் மாணவர்களுக்கு பாடத்தை கற்றுக்கொடுக்க போதிய திறமைவாய்ந்த ஆசிரியர்கள் இல்லை.

அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கற்றுக்கொடுக்க அதிக அளவிலான பயிற்சியை புதுவை அரசு கல்வித்துறை வழங்க வேண்டும். அதிக மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளதால் வரும் 30-ம் தேதிக்குள் மறுதேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்களை கல்வித்துறை வழங்க வேண்டும். தோல்வியடைந்தவர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்கள் தேர்ச்சியடைய ஆசிரியர்கள் துணை நிற்க வேண்டும்” என்றார்.