மன்னிப்பு கேட்பவர் பெரிய மனிதர்..! சல்மான் கானுக்கு பாடகர் அறிவுரை!
பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாடகர் அனுப் ஜலோடா கூறியுள்ளார்.
1998 ராஜஸ்தானில் ஹம் சாத் சாத் ஹைன் படத்தின் படப்பிடிப்பின்போது பிஷ்னோய் சமூக மக்களின் புனிதமாக கருதப்படும் பிளாக் பக் எனும் மானை சல்மான் கான் வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் பலமுறை சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சிறையில் இருந்தும் கொலை முயற்சியில் அவரது ஆள்களை ஏவியிருப்பது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சமீபத்தில் பாபா சித்திக் என்ற என்சிபி தலைவரை சல்மான் கான் நண்பர் என்பதாலே சுட்டுக் கொன்ற நிகழ்வு மும்பையை உலுக்கியது.
மன்னிப்பு கேட்பவர் பெரிய மனிதர்
இந்நிலையில், பாடகரும் ராப் இசைக் கலைஞருமான ஜலோடா ஐஏஎன்எஸுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சல்மான் கான் முதலில் கிடைக்கும் விமானத்தைப் பிடித்து பிஷ்னோய் கோவிலுக்குச் சென்று அந்தச் சமூக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்தக் குற்றத்தை அவர் செய்தாரா இல்லையா என்பது முக்கியமில்லை. அவரது நண்பர்கள், உறவினர்கள் அதனால் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இதைச் செய்ய வேண்டும் என்பதே மிகவும் சரியானதாக இருக்கும்.
மன்னிப்பு கேட்பது ஒரு மனிதனை பெரியவனாக்கும். அதனால், சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
120 பாதுகாவலர்களுடன் சல்மான் கான்
சமீபத்தில் பிஷ்னோய் மக்களுக்கு சல்மான் கான் பணம் தருவதாகவும் அதை தாங்கள் மறுத்துவிட்டதாகவும் லாரன் பிஷ்னோயின் உறவினரான ரமேஷ் பிஷ்னோய் கூறியிருந்தார்.
சல்மான் கான் தற்போது சிங்கம் அகெய்ன் படத்தில் தனக்கான கௌரவ வேடத்திற்கான படப்பிடிப்பில் இருக்கிறார். மும்பையில் ஸ்டூடியோ ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணத்துக்காக மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
120 தனிப்பட்ட பாதுகாவலர்கள், 30 காவல்துறை அதிகாரிகளுடன் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பில் சல்மான் கான் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.