ரமலான் நோன்புடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்! திடலில் மயங்கி விழுந்து பலியான சோகம்!
ஆஸ்திரேலியாவில் நோன்புடன் விளையாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் திடலில் மயங்கி விழுந்து பலியானார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைல் ஸஃபர் கான் என்ற கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கிளப் போட்டிகளில் விளையாடி வந்தார்.
கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் பிரின்ஸ் ஆல்ஃபிரட் ஓல்ட் கல்லூரி மற்றும் ஓல்ட் கான்கார்டியன்ஸ் அணி மோதியுள்ளன. இதில், ஜுனைல் ஓல்ட் கான்கார்டியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். மாலை 4 மணியளவில் அதீத வெப்பம் காரணமாக ஜுனைல் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். 40 ஓவர்கள் பீல்டிங் செய்துவிட்டு ஏழு ஓவர்கள் பேட்டிங் செய்த பிறகு, ஆஸ்திரேலிய பகல் நேரப்படி மாலை 4 மணியளவில் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தார்.
இதையும் படிக்க: இணையத்தைக் கலக்கும் தோனி - சந்தீப் ரெட்டி வங்கா விளம்பரம்!
உலகம் முழுவதும் வெய்யில் வாட்டிவதைத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தெற்கு ஆஸ்திரேலியாவிலும் கடுமையான வெய்யிலின் தாக்கம் இருந்து வருகிறது. போட்டி நடந்த சனிக்கிழமை அன்று 40 டிகிரி அளவுக்கு வெய்யில் தாக்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
42 டிகிரிக்கு மேல் வெய்யில் இருந்தால் போட்டி ரத்து செய்யப்படும் என்று விதியும் உள்ளது. இருப்பினும், அதற்கு குறைவாக இருந்ததால் போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டது.
ரமலான் மாதம் என்பதால், ஜுனைல் கான் நோன்பு கடைபிடித்து வந்துள்ளார். மேலும், அதிக நீரிழப்பு காரணமாக நீரும் அருந்திவந்துள்ளார். இருந்தாலும் மைதானத்தில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிவந்த ஜுனைல் கடந்த 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து அடிலெய்டுக்கு குடிபெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்!