TVK: கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் அளித்த தவெக; வங்கியி...
4 கும்கிகளுடன் சுற்றி வளைப்பு - சிக்கியது கோவை ரோலக்ஸ் யானை
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானை, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை விளை நிலங்கள், வீடுகளை சேதப்படுத்துவதாக புகார் எழுந்தது.

அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் ‘ரோலக்ஸ்’ என்று பெயரிட்டனர். இந்த யானையால் மனித உயிர்களுக்கு சேதங்களும் ஏற்பட்டதால், அதை பிடிக்க சொல்லி விவசாயிகளும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2 மாதங்களாக ரோலக்ஸ் யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி, கபில்தேவ் கும்கி யானைகளும், முதுமலை யானைகள் முகாமில் இருந்து வசிம், பொம்மன் கும்கி யானைகளும் அழைத்து வரப்பட்டன.

மருத்துவர்கள் வெண்ணிலா, கலைவாணன், ராஜேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று இரவு தொண்டாமுத்தூர் இச்சுக்குழி பகுதியில் யானை சுற்றி வந்துள்ளது.
அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 2 மணியளவில் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பிறகு வனத்துறையினர் அந்த யானைக்கு கயிறு கட்டி, காலை 7 மணியளவில் கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றினார்கள்.


ரோலக்ஸ் யானையை ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்ஸ்லிப் உள்ள வரகளியார் முகாமிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு அந்த யானையை கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சி வழங்கப்படும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.