போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!
Ramalan: ``உணவு தண்ணீர் மட்டும் இல்ல... இதுவும் கூடாது'' - முஸ்லிம்களின் நோன்பு குறித்து தெரியுமா?
முஸ்லிம்களின் மிகப் பிரதானமான வழிபாடு என்றால் அது நோன்பு. ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள். இந்த ரமலான் மாதம் நாளை முதல் தொடங்குகிறது. அதென்ன ரமலான் நோன்பு... முஸ்லிம்கள் அதை எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையின் புதுப்பள்ளியில் இமாமாக பணியாற்றும் மன்சூர் அலி ஆலிம் நூரி என்பவரை தொடர்புகொண்டோம்.

அவர், ``ரமலான் மாதம் இஸ்லாமிய நாள்காட்டியின் படி ஒன்பதாவது மாதம். இந்த மாதத்தை இஸ்லாமியர்களான நாங்கள் புனித மாதங்களில் ஒன்றாகக் கருதுகிறோம். எங்களின் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காண்பித்துக் கொடுத்த வழிகாட்டுதலின்படியே இந்த நோன்பை கடைபிடித்து வருகிறோம். கி.பி. 624-ம் ஆண்டு இந்த நோன்பு கடமையாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் பிறை பார்த்த மறுநாளிலிருந்து இந்த நோன்பு தொடங்கும்.
அதிகாலை வானில் வரும் மெய் வெள்ளை என்ற (ஸஹர்) நேரம், அதாவது, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நோன்பின் தொடக்க நேரம் அதிகாலை 5 மணி முதல், மாலை சூரியன் மறையும் (இஃப்தார்) நேரம் வரை பகலில் மட்டும் நோன்பு இருப்போம். இந்த நோன்பு இருக்கும் நேரத்தில், நீராகரமோ, திட ஆகாரமோ எதுவும் வயிற்றுக்குள் செல்லக் கூடாது. கணவன் மனைவியாக இருந்தாலும் நோன்பு நேரத்தில் உறவுகொள்ளக் கூடாது. சில சகோதர சமயத்தவர்கள் 'எச்சில் கூடவா விழுங்கக் கூடாது' எனக் கேட்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் அல்ல. வழக்கம் போலதான் இருப்போம். வெளியிலிருந்து எந்த ஆகாரத்தையும் வயிற்றுக்குள் செலுத்தக் கூடாது என்பதுதான் முக்கிய நிபந்தனை.

இந்த நோன்பு குழந்தைகளுக்கெல்லாம் கிடையாது. வயது வந்தவர்கள் மட்டும்தான் கடைபிடிக்க வேண்டும். அதே நேரம், நோயாளிகள், கர்ப்பிணிகள், பால்கொடுக்கும் தாய்மார்கள், பயணத்தில் இருக்கும் பயணிகள் ஆகியோர் அந்த நாள்களில் நோன்பு வைக்கத் தேவையில்லை. நோன்பு இருக்கும் போது பாவமான காரியங்களில் அதாவது பொய், ஏமாற்றுவது, புறம்பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் நோன்பு வைத்தும் எந்தப் பயனும் இல்லை என முஹம்மது நபி (ஸல்) கண்டித்திருக்கிறார்கள்.
யாராவது உங்களிடம் வாக்குவாதத்துக்கோ, சண்டைக்கோ வந்தால் கூட நான் நோன்பு வைத்திருக்கிறேன் எனக் கூறி அங்கிருந்து விலகிவிட வேண்டும் என வழிகாட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த மாதத்தில், கூடுதலாக பிறரின் பசியை உணரும் வாய்ப்பு இருப்பதால், அதிகம் தர்மம் செய்ய வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நோன்பின் மூலம் மன ஓர்மையும், நம் மீது நமக்கான கட்டுப்பாடும் பலமாகும். உதாரணத்துக்கு, நோன்பு முடியும் இஃப்தார் நேரம் மாலை 6:25 என்று வைத்துக்கொள்ளுங்கள். நோன்பு இருப்பவர் 6:24-க்கு ஏதாவது சாப்பிட்டாலோ, குடித்தாலோ கூட அவருடைய அன்றைய நோன்பு முறிந்து விடும்.
எனவே, எவ்வளவு பசி, தாகமாக இருந்தாலும் மனதை கட்டுப்பாடுடன் வைத்திருந்து, நமக்கு அனுமதிக்கப்பட்டதை, உரிமையானதை மட்டும்தான் அனுபவிக்க வேண்டும் என்பதை இந்த நோன்பு பழக்கப்படுத்தும். நோன்பின் நோக்கம் 'இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்காக நம்முடைய வாழ்வை சீராக்கிக் கொள்ள வேண்டும்' என்ற இறையச்சம்தான் பிரதானம் என்கிறது குர்ஆன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
