Aus vs Ind : 'குறுக்கிட்ட மழை; முதல் போட்டியிலேயே தோற்ற இந்திய அணி!' - என்ன நடந்...
Silent Diwali: பல ஆண்டுகளாக பட்டாசுகளே வெடிக்காத தமிழக கிராமங்கள் பற்றி தெரியுமா?
தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தமிழ்நாட்டில் சில கிராமங்கள் பட்டாசுகளைத் தவிர்த்து, சத்தமின்றி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன.
இந்த 'அமைதியான தீபாவளி' மூலம் பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் மீதான தங்களின் அன்பையும், அக்கறையையும் இந்தக் கிராம மக்கள் வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கிறார்கள் இவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பறவைகள் இனப்பெருக்கத்திற்காகத் தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு வருகின்றன.

தீபாவளி பண்டிகை பொதுவாக இதே காலகட்டத்தில் வருவதால் பட்டாசு சத்தம் பறவைகளைப் பயமுறுத்தி, அவற்றின் இனப்பெருக்கச் சூழலைப் பாதிக்கக்கூடும். இதனைக் கருத்தில் கொண்டு, பல கிராமங்கள் பட்டாசு வெடிப்பதைத் தாங்களாகவே முன்வந்து நிறுத்தியுள்ளன. அந்தக் கிராமங்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளலாம்
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்கள், கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுகின்றன.
செல்லப்பம்பாளையம், வடமுகம் வெள்ளோடு, செம்மாண்டம்பாளையம், கருக்கன்காட்டு வலசு, பூங்கம்பாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனைப் பின்பற்றி வருகின்றன. பட்டாசுகளுக்குப் பதிலாக, தீபங்கள் மற்றும் மின்விளக்குகளால் தங்கள் இல்லங்களை அலங்கரித்தும், மத்தாப்புகளை மட்டும் கொளுத்தி இவர்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
ஈரோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் இதுபோன்று பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
சிவகங்கை
கொள்ளுகுடிப்பட்டி கிராம மக்கள், வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளைப் பாதுகாக்க, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டாசுகளைத் தவிர்த்து வருகின்றனர்.
திருச்சி
தோப்புப்பட்டி மற்றும் சாம்பட்டி கிராமங்களில், பழமையான ஆலமரத்தில் வசிக்கும் வவ்வால்களைப் பாதுகாக்க மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இந்த வழக்கம் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.
திருநெல்வேலி
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்கள், இடம்பெயர்ந்து வரும் பறவைகளுக்காக அமைதியான தீபாவளியைக் கடைப்பிடிக்கின்றன.
இந்தக் கிராமங்களின் செயல்கள், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கமான உறவிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.