ஆரோவில்: `காவு கொடுக்கப்படும் விவசாயப் பண்ணை!’ - அம்பலமான சென்னை ஐஐடி ஒப்பந்தம்
Vidharth: ``நம் சமூகத்தில் இயல்பாக ஒரு ஸ்கேம் நடந்துகொண்டிருக்கிறது!" - ̀மருதம்' குறித்து விதார்த்
எளிமையான தோற்றத்திலும் உணர்ச்சி நிறைந்த நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் விதார்த், தனது புதிய திரைப்படமான `மருதம்' பற்றி விகடனுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அறிமுக இயக்குநர் காஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம், ஒரு விவசாயி தன் தாத்தாவின் காலத்திலிருந்து பெற்ற நிலத்தைக் காப்பாற்ற நடத்தும் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. இப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகவுள்ளது.
சமூகத்தில் இயல்பாக நடந்துகொண்டிருக்கும் ஒரு மோசடி (Scam) பற்றி விதார்த் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது, "நம் சமூகத்தில் இயல்பாக ஒரு ஸ்கேம் நடந்துகொண்டு வருகிறது.
நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்குக் கீழ் இருப்பவர்களை, குறிப்பாக விவசாயிகளைப் பலிகடாவாக ஆக்கும் இந்த மோசடியை, மிக எளிதாகச் சாதாரண விஷயமாகச் சொல்லி கடந்து செல்வது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு விழிப்புணர்வாக இல்லையென்றாலும், ஒரு எச்சரிக்கையாவது இந்தப் படம் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்தக் கதையைத் தேர்வு செய்தேன்.

இந்தக் கதை இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பு நடந்த கிராமத்துக்கே சென்று, அங்கேயே இருந்தவர்களின் வாழ்க்கைமுறையைக் கவனித்து, அவர்களின் உடை, உடல்மொழி ஆகியவற்றைக் கவனித்து அதைத் திரைப்படத்தில் காட்டியிருக்கிறோம்." என்றவர், " 'மஸ்குலர் டிஸ்ட்ராஃபி'யால் பாதிக்கப்பட்ட என்னுடைய ரசிகர் ஒருவரைச் சந்தித்தேன்.
அவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் அவரையும் இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அந்த ரசிகருடன் சேர்ந்து படத்தைப் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் இப்போது நம்முடன் இல்லை. அந்த செய்தி என்னை வருத்தமடையச் செய்தது." என்ற வருத்தத்தையும் தெரிவித்தார்.