`எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்?
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் மீன்பிடிக்கும் படகில் சீமான் கடலுக்குள் சென்றார். தொடர்ந்து வருகிற நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ள கடலம்மா மாநாட்டிற்காக மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே காடுகளைப் பாதுகாக்க மாநாடு கால்நடைகளை பாதுகாக்க மாநாடு பனை மரங்கள் மற்றும் பனைத் தொழிலாளர்களை பாதுகாக்க மாநாடு நடத்திய நிலையில், தற்போது மீனவர்களையும் மீன் தொழிலையும் பாதுகாப்பதற்காக மாநாடு நடத்த உள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நிலத்தில் செய்வது மட்டுமல்ல விவசாயம், கடலில் செய்வதும் விவசாயம்தான். கடலில் நாள்தோறும் மீனவர்கள் படுகின்ற துயரங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கிறோம் என்று கைது செய்யப்படுகிறோம். படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்று இந்த துயரத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.
இந்திய கடற்பரப்பில் அதிக அளவில் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கிடைக்கிறது. செத்து கரை ஒதுங்கும் மீன்கள் வயிற்றில் கூட பிளாஸ்டிக் கழிவுகள் தான் காணப்படுகிறது. இந்த கடலையும் கடல் மீனவர்களையும் கடல் சார்ந்த மீனவர்களை மீட்பதற்காக நவம்பர் 15-ம் தேதி தூத்துக்குடியில் கடல் மாநாடு நடத்தப்பட உள்ளது. கரூர் விபத்தால் மரங்களின் மாநாடு மக்களிடம் சரியாக செல்லவில்லை. கரூரில் விஜய்க்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்குள்ள மக்களுக்கு தான் பாதிப்பு. விஜய் இதுபோல் நிகழ்வுகளை தவிர்த்து விட்டு பொதுக்கூட்டமாக நடத்தினால் நல்லது. பா.ஜ.க., விஜய்யை எப்படியாவது கூட்டணிக்கு இழுத்துக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒரே நிலைப்பாடு தனித்துதான் போட்டி. எங்களின் கோட்பாட்டை கொண்டு அடமானம் வைக்க முடியாது. எதிர்காலத்தில் சுழற்சி முறையில் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மூன்று முறை வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். அதே பா.ஜ.கவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு முறை வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அப்படி கொடுத்தால் தான் இது என் நாடு எனது நாட்டிலுள்ள மக்களுக்கு இதுபோல் ஒரு தலைமை பதவி கிடைக்கும் என்று நினைப்பு வரும்.”என்றார்.