'15 ஆண்டுகளாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம்; எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா' ...
Vijay : 'உங்க குடும்பத்துக்கு நான் பொறுப்பு!' - உடைந்த விஜய்; அப்செட்டில் முக்கிய நிர்வாகி!
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லப்புரத்திலுள்ள ரெசார்ட்டில் விஜய் தனித்தனியாக சந்தித்து வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை விஜய் ஏற்றுக்கொள்வதாக கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை தவெகவின் முக்கிய நிர்வாகிகள் நேற்றே மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்துவிட்டனர். தனியார் விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்திக்க காலை 8:30 மணியளவில் விஜய் அந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். காலை 9 மணியிலிருந்து அந்த குடும்பங்களை சந்தித்து உரையாட ஆரம்பித்திருக்கிறார்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 15-20 நிமிடங்கள் ஒதுக்கி அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அந்தக் குடும்பங்களை குறித்த முழு விவரங்களையும் கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறார். உயிரிழந்தோரின் குடும்பங்களை விஜய் தத்தெடுக்கப் போவதாக முன்னரே அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த குடும்பங்களின் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் 'உங்க குடும்பத்துக்கு நான் பொறுப்பு!' என விஜய் உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சில குடும்பங்களின் நிலையையும் அவர்களின் துக்கத்தையும் கேட்டு விஜய்யும் உடைந்து போய் கண்ணீர் சிந்தியதாகவும் தகவல் சொல்கின்றனர் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள்.
இரங்கல் நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் அப்செட்டான நிகழ்வும் நடந்திருக்கிறது. விஜய்யுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வரும் வெங்கட்ராமனுக்கு கட்சியின் பொருளாளர் பதவியை விஜய் கொடுத்திருந்தார். விஜய்யுடன் பெர்சனலாக பேசக்கூடியவர் என்பதால் ஆரம்பத்தில் செல்வாக்கோடு வலம் வந்தார். ஆனால், கட்சிக்குள் நிலவும் பவர் செண்டர் மோதலில் வெங்கட்ராமன் ஓரங்கட்டப்பட்டார்.

மற்ற எந்த நிர்வாகியுடனும் இணைந்து செயல்படாமல் வெங்கட்ராமன் தனித்தே செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று அந்த சந்திப்பு நடக்கும் ரெசார்ட்டுக்கு வெளியே வெங்கட்ராமனின் காரை பாதுகாவலர்கள் மறித்திருக்கின்றனர். கட்சியின் பொருளாளர், முக்கிய நிர்வாகி எனக் கூறிய பிறகும் காரை அனுமதிக்காததால் அவர் கடும் அப்செட் ஆனார். ஓங்கி ஹார்ன் அடித்து, உள்ளே இருக்கும் நிர்வாகிகளை போனில் அழைத்த பிறகே வெங்கட்ராமனின் கார் உள்ளே அனுமதிக்கப்பட்டது. முக்கிய நிர்வாகி எனக் கூறிய பிறகும் வெங்கட்ராமனை 10 நிமிடங்கள் வாசலிலேயே காக்க வைத்ததால் அவர் கடும் அப்செட் என்கின்றனர்.
















