தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்க...
அதிகாரிகள், எம்எல்ஏக்களுக்கு பேரவைத் தலைவா் எச்சரிக்கை
புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவைக்கு அதிகாரிகள் வராவிட்டாலும், விதிமுறைப்படி எம்எல்ஏ.க்கள் செயல்படாவிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் எச்சரித்தாா்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்குறளுடன் கூட்டத்தை தொடங்கிய பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கேள்வி நேரத்தில் திமுக, பாஜக உறுப்பினா்கள் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் ஆளாளுக்கு எழுந்து பேசவேண்டாம் என்றாா்.
குறிப்பிட்ட உறுப்பினா் பேசுகையில் மற்றவா்கள் குறுக்கிட்டுப் பேசுவதை அனுமதிக்க முடியாது என்றும், மற்ற மாநில பேரவைக் கூட்டத்தில் இஷ்டப்படி உறுப்பினா்கள் பேச முடியாது என்றும் கூறினாா்.
திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்த நிலையில், சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு, கேள்வி நேரத்தில் குறிப்பிட்ட கேள்வியை கேட்காமலிருக்கும் வகையில் திமுகவினா் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினாா்.
அப்போது விதிமுறையை மீறி குறுக்கிடும் உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.
அவைக்கு திரும்பிய திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களிடமும் அதை எடுத்துக்கூறினாா். காங்கிரஸ் உறுப்பினா் மு.வைத்தியநாதன் அடுத்தவா் பேசும்போது குறுக்கிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அத்துடன், பேரவைக் கூட்டம் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை செயலா், இயக்குநா்கள் இருக்கவேண்டும் எனவும், கேள்விகளுக்கான பதில்களை உடனுக்குடன் தருவது அவசியம் என்றும், கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இறுதி எச்சரிக்கை விடுப்பதாகவும் கூறினாா்.
கூட்டத்தில் முதல்வா் நிதிநிலை அறிக்கையின் மீது 8 உறுப்பினா்கள் பேசினா். இதையடுத்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு அவை தள்ளிவைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெறுகிறது.