மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
அதிமுக: "நான் திமுகவின் பி டீம் இல்லை; எடப்பாடி பழனிசாமிதான் ஏ1" - செங்கோட்டையன் காட்டம்
அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து எம்.ஜி.ஆர்-க்கும், ஜெயலலிதாவுக்கும் நான் விசுவாசமாக இருந்த காரணத்தில்தான் எனக்கு இத்தனை பொறுப்புகளை இருவரும் வழங்கினர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக இரண்டு முறை எனக்கு வாய்ப்புக் கிடைத்தும், என்னால் ஏதாவது இடையூறு வந்துவிடக் கூடாது என்பதற்காக அதை விட்டுக் கொடுத்துள்ளேன்.
அதிமுக-வுக்காக என் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளேன். 2019, 2021 மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவின் காரணமாக வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஜெயலலிதா காலத்தில் ஒருமுறை தோல்வி ஏற்பட்டால், அடுத்து பெறும் வெற்றி என்பது சரித்திர வெற்றியாக இருக்கும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா கட்சியின் மூத்த நிர்வாகிகள் எல்லோரிடமும் கருத்தைக் கேட்டார். அப்போதும்கூட எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறியவன் நான்.
எடப்பாடி பழனிசாமிக்காக சசிகலாவிடம் நான் பரிந்துரைத்தேன். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றபின் ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான் உள்பட மூத்த நிர்வாகிகள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கருத்துகளை தெரிவித்தோம்.
நாங்கள் 6 பேர் சொன்ன கருத்துகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பிறகு யாரும் என்னைச் சந்திக்கவில்லை என செய்தியாளர்களிடம் பொய் கூறினார். பல கோடி தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். எல்லோரும் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் எனத் தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
நான் எடப்பாடி பழனிசாமியை பலமுறை சந்தித்தபோது அந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளேன். ஆனால், ஏற்றுக் கொள்ளாமல் இருந்ததன் விளைவாக நான் செய்தியாளர்களைச் சந்தித்து என் கருத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி வெளிப்படுத்தினேன்.

அப்போது கூட நான் அவருக்குக் கெடு விதிக்கவில்லை. ஒருங்கிணைப்பு குறித்து 10 நாள்களுக்குள் பேச்சைத் தொடங்க வேண்டும். யாரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பழனிசாமியே முடிவெடுக்கலாம் என்றுதான் சொன்னேன். ஒற்றுமை இல்லாததான் விளைவாகவே கடந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் 3-ஆவது இடத்துக்கு அதிமுக போனது.
மீண்டும் அதிமுக புத்துயிர் பெற வேண்டும். 100 ஆண்டுகாலம் அதிமுக வலிமையாக இருக்கும் என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றத்தான் எனது கருத்தைச் சொன்னேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 5000 வாக்குகளைத்தான் அதிமுக பெற்றது.
அதிமுக-வின் நிலை என்பதை அறிந்துதான் கருத்தை வெளிப்படுத்தினேன். கட்சியின் எதிர்காலம் கருதியே ஒன்றிணைந்து செயல்படவே ஓ.பன்னீர்செல்வத்துடன் தேவர் ஜெயந்தியில் கலந்துகொண்டேன். அதற்கு எனக்கு கிடைத்த பரிசுதான் நான் நீக்கப்பட்டிருப்பது.
நான் திமுக-வின் பீ டீம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. நான் திமுகவின் பி டீம் இல்லை. அவர்தான் ஏ1-ஆக உள்ளார். கட்சியில் இருந்து நீக்கியதற்கு வேதனை, வருத்ததுடன் கண்ணீர் சிந்துகிறேன். இரவு முழுவதும் தூங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வருவதற்கு முன்பே எம்எல்ஏ-வாக இருந்துள்ளேன்.
என்னை நீக்குவதற்கு முன்பு நோட்டீஸாவது அனுப்பி இருக்க வேண்டும். சர்வாதிகாரிபோல் செயல்பட்டு என்னை நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. தேர்தலின்போது அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் துரோகம் செய்துவிட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது.
அதைக்கேட்டாலே யார் துரோகம் செய்துள்ளார்கள் என்பது தெரியவரும். யார் குற்றம் செய்துள்ளார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி தெரிந்து பேசியிருக்க வேண்டும். அவர் சசிகலாவிடம் இருந்து எப்படி பதவி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கட்சியின் நெருக்கடியான காலத்தில் 4 ஆண்டு காலம் அரவணைத்த பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி என்ன செய்துள்ளார். 2024, 2026 மற்றும் 2029-இல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது மாறிமாறிப் பேசுகிறார்.
அதிமுக தொண்டர்களின் கோயிலாகக் கருதப்படும் கொடநாடு கொலை குறித்து இதுவரை ஏன் அவர் குரல் கொடுக்கவில்லை. கட்சி விதியின் அடிப்படையில் என்னை நீக்கியது செல்லாது. எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞரிடம் பேசி முடிவு எடுக்கவுள்ளேன்.
துரோகத்துக்கு நோபல் பரிசு எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்க வேண்டும். அதற்கு அவர்தான் முழுமையான தகுதி படைத்தவர். எடப்பாடி பழனிசாமி தற்காலிகப் பொதுச் செயலாளர்தான். நிரந்தரப் பொதுச் செயலாளர் அல்ல" என்றார்.


















