மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
``திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாள்கள் தான், கவுண்டவுன் ஸ்டார்ட்'' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது சதய விழாவின் முக்கிய நிகழ்வாகும்.
அதன்படி, அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தனர். இதேபோல் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நாட்டில் எத்தனையோ மன்னர்கள் ஆண்டனர். அனைவரையும் மிஞ்சியவர் மாமன்னர் ராஜராஜ சோழன். திறமையான ஆட்சி நடத்தினார். நமது பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் 1000வது ஆண்டு விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழனின் புகழை உலகெங்கிலும் பரப்பினார்.
தஞ்சை பெரியகோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் சிலையை கோயிலுக்குள் வைப்பது குறித்து பல தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து, அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் பரிசீலனை செய்வோம்.

நெல் கொள்முதல் தாமதத்தால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும், நெல் முளைத்து வீணாகி வருகிறது. நெல் மூட்டைகளுடன் லாரிகள் பல நாட்களாக காத்திருக்கின்றன. விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதைப் பற்றி கவலைப்படாமல் முதல்வரும், துணை முதல்வரும் சினிமா பார்த்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டனர். இதுவரை கூறிய எதையும் தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை.
தி.மு.க ஆட்சிக்கு இன்னும் 140 நாட்களே உள்ளன. ஆட்சிக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்,” என்றார்.


















