தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
அரசின் அக்கறையின்மையே உயிரிழப்புக்குக் காரணம்: மாயாவதி
பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலுக்குக் கர்நாடக அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கண்டம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெறும் 35 ஆயிரம் பேர் மட்டுமே நுழைய இடமிருந்த சின்னசாமி அரங்குக்குள் 3 லட்சம் பேர் நுழைந்ததும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, நெரிசலை ஏற்படுத்தியதற்காக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதைப் போல, சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் கைது செய்யப்படுவார்களா? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து இன்று மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களுடன் மாயாவதி பேசுகையில்,
அரசுத் திட்டங்களில் தீவிரமாகவும், உணர்திறன் மிக்கதாகவும் இல்லாததால், ஒவ்வொரு முறையும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது மிகுந்த கவலைக்குரியது. மாநில அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
பெங்களூரில் நிகழ்ந்த இந்த சம்பவம் கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு துயர நிகழ்வாகும். நாட்டின் அரசியலில் எதிர்மறை, வெறுப்பு, விரோதம், குறுகிய மனப்பான்மை, ஒருவருக்கொருவர் எதிராக வழக்குத் தொடருதல் ஆகியவை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஏதோ ஒரு பிரச்னையில் தலைவர்களின் முரட்டுத்தனமான மற்றும் அநாகரீகமான நடத்தையால் பொதுமக்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். நாட்டில் உள்ள நச்சு சூழல் அதன் வளர்ச்சி மற்றும் சுயச்சார்பு முயற்சிகளை நேரடியாகத் தடுக்கிறது.
நாட்டின் பணக்காரர்களின் செல்வம் இப்போது பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடுகளுக்குச் செல்கிறது, இதன் காரணமாக வறுமை, வேலையின்மை, கல்வியறிவின்மை மற்றும் பின்தங்கிய நிலை போன்ற எரியும் பிரச்னைகள் இன்னும் தீவிரமாகி வருகின்றன என்று அவர் கூறினார்.