தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
எத்தனால் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 12 பேர் கைது!
தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில், எத்தனால் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையால் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில், எத்தனால் ஆலை அமைக்க தெலங்கானா அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 7 முதல் 8 கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள், ராஜோலி மண்டல் பகுதியில் நேற்று (ஜூன் 4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், அந்த ஆலையின் நிறுவனத்தால், அமைக்கப்பட்டிருந்தத் தற்காலிக முகாம்கள் மற்றும் சரக்குப் பெட்டிகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அங்கு உடனடியாக காவல் துறையினர் விரைந்து வன்முறையைக் கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில், முகாம்களுக்கு தீ வைத்தது மற்றும் கலவரம் உண்டாக்கியது, ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜோலி காவல் நிலையத்தில் ஆலையின் நிர்வாகத்தினர் புகாரளித்தனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்னதாக, அம்மாவட்டத்தின் பெத்தா தன்வாடா கிராமத்துக்கு அருகில் சுமார் 35 முதல் 40 ஏக்கர் பரப்பளவில், தானியம் சார்ந்த எத்தனால் ஆலை அமைக்க தனியார் நிறுவனம் ஒன்று அனுமதி பெற்றுள்ளது.
இதுகுறித்து, அங்குள்ள கிராமவாசிகளிடம் அந்த நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு