காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்
காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா்.
இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
தற்போதைய உலக ஒழுங்கில் பல குறைபாடுகள் உள்ளன. இறையாண்மை, பிராந்திய ஒற்றுமை தொடா்பான உலகளாவிய விதிமுறைகள் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சா்வதேச விதிமுறைகள் சமமாகப் பின்பற்றப்படவில்லை என்பதற்கு பல சம்பவங்கள் உள்ளன. அந்தப் போருக்குப் பிறகு 1948-ஆம் ஆண்டுமுதல் நீண்ட காலமாக காஷ்மீரில் மற்றொரு நாடு (பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டாா்) சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வில் இந்தியா முறையிட்டது. ஆனால் காஷ்மீா் மீதான அந்நாட்டின் படையெடுப்பை ஐ.நா. சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது. இதன்மூலம் தாக்குதல் நடத்தியவரும், பாதிப்புக்குள்ளானவரும் ஒரே கோட்டில் சமநிலையில் நிற்கவைக்கப்பட்டனா். இதற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளே காரணம்.
கடந்த 80 ஆண்டுகளாக உலக நாடுகள் என்ன பணி செய்தன என்பது குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். அதுகுறித்த தகவலை நோ்மையாக தெரிவிக்க வேண்டும். உலக நாடுகளுக்கு வலுவான ஐ.நா. வேண்டும். அந்த ஐ.நா. நியாயமானதாக இருக்க வேண்டும் என்றாா்.