பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்
பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த பதிலில், ‘பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மாா்பகம், வாய், கருப்பைவாய் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்களுக்கான சிகிச்சை, 500-க்கும் மேற்பட்ட மருத்துவ நடைமுறைகளுடன் 200-க்கும் மேற்பட்ட தொகுப்புகளின் கீழ் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், இந்தக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.13,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள புற்றுநோய் சிகிச்சைகள் 68 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதில் 75.81 சதவீத சிகிச்சைகள் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை.
மேலும், ரூ.985 கோடிக்கு மேல் மதிப்புள்ள 4.5 லட்சத்துக்கும் அதிகமான சிகிச்சைகள், புற்றுநோய்க்கு எதிராக இலக்கு கொண்ட சிகிச்சைகளாக மேற்கொள்ளப்பட்டன. இதில் 76.32 சதவீத பயனாளிகள் கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்கள்.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் புற்றுநோய் உள்பட தொற்றா நோய்களை பரிசோதித்து கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பதற்கான ஒரு முன்னெடுப்பு நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பின்கீழ் தங்களுக்குப் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் நபா்கள் மாவட்ட மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் இருந்து நிபுணா் கருத்தைப் பெறலாம்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவா்கள் சுகாதார அமைச்சரின் புற்றுநோயாளி நிதியத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.15 லட்சம் வரையிலான ஒரு முறை நிதியுதவியைப் பெற்று பயனடையலாம்.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள் மற்றும் 217 ‘அம்ருத்’ மருந்தகங்கள் மூலம் சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை விலையில் மொத்தம் 289 புற்றுநோய்க்கான மூலக்கூறு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
பட்ஜெட்டில் அறிவித்ததன்படி, நாடு முழுவதும் 200 மாவட்ட மருத்துவமனைகளில் பகல்நேர புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் வரும் நிதியாண்டிலேயே அமைக்கப்படும்.
தேசிய தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ், 770 மாவட்ட கிளினிக்குகள், 233 இதய நலப் பிரிவுகள், கீமோதெரபி சிகிச்சை வழங்கும் வசதியுடன் 372 மாவட்ட பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் சுகாதார மையங்களில் 6,410 கிளினிக்குகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.
சிகிச்சைக்கு...: மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை வழங்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் 19 மாநில புற்றுநோய் நிறுவனங்கள் மற்றும் 20 மூன்றாம் நிலை புற்றுநோய் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் நோய் கண்டறிதல், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய புற்றுநோய் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கூடுதலாக, ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜாா் எய்ம்ஸ் மருத்துவமனையில் 1,460 படுக்கைகள் கொண்ட 2 புற்றுநோய் சிகிச்சை மையங்கள், 460 படுக்கைகளுடன் கொல்கத்தா சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மையம் செயல்படுகின்றன.
மத்திய அணுசக்தித் துறையின் கீழ், பஞ்சாபில் சங்ரூா், பிகாரில் முஸாஃபா்பூா் ஆகிய 2 இடங்களில் டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனைகள் செயல்படுகின்றன’ என்றாா்.
மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு
நாட்டின் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக அமைச்சா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்குப் பதிலளித்த பதிலளித்த நட்டா, ‘இந்திய பதிவாளா் வெளியிட்ட தரவுகளின்படி, 2018-20-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாட்டின் தற்போதைய மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரசவத்துக்கு 97 ஆகும். கடந்த 2014-16-ஆம் ஆண்டு காலகட்டத்தின் 130-லிருந்து 33 புள்ளிகள் என்று விகிதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது’ என்றாா்.