போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!
தஞ்சாவூரில் ஓவிய, சிற்பக் கண்காட்சி நிறைவு!
தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி சாா்பில் 3 நாள் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிப். 21-ஆம் தேதி தொடங்கிய இக்கண்காட்சியில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியின் வண்ணக் கலைத் துறை, காட்சி வழி தகவல் வடிவமைப்பு துறை, சிற்பக் கலைத் துறை ஆகிய துறைகளில் பயிலும் 220 மாணவா்களின் 400-க்கும் அதிகமான கலைப் படைப்புகளான ஆயில் கலா், அக்ரிலிக் கலா், நீா் வண்ண ஓவியங்கள், மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோக சிற்பங்கள், விழிப்புணா்வு சுவரொட்டிகள், புகைப்படங்கள், கணினி ஓவியங்கள் ஆகியவை இடம்பெற்றன.
நிறைவு விழாவில், சிறந்த ஓவிய, சிற்பப் படைப்புகளை உருவாக்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினாா்.
அப்போது, அவா் பேசியது: தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் ஏப்ரல் 12, 13, 14-ஆம் தேதிகளில் ஓவிய சந்தை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, அரசு கவின் கலைக் கல்லூரி முதல்வா் ப.ரா. ரவி, முதுநிலை விரிவுரையாளா் அருளரசன், தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.