பெரியார் சர்ச்சை: மத்திய நிதி அமைச்சருக்கு எதிராக விஜய் கேள்வி!
திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜஸ்வி சூர்யா!
பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா - தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமண வரவேற்பு மார்ச் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.
ஞாயிற்றக்கிழமை காலை 11 மணிக்கு, பெங்களூருவில் உள்ள பாலஸ் கிரவுண்ட் என்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற திருமண வரவேற்புக்கு, தன்னுடைய எக்ஸ் பக்கம் வாயிலாக அனைவரையும் அழைத்திருந்தார் தேஜஸ்வி சூர்யா.
அனைவரையும் தன்னுடைய திருமண வரவேற்புக்கு அழைப்பதாக விடியோ வெளியிட்டிருந்த தேஜஸ்வி, ஒரே ஒரு கோரிக்கையும் வைத்திருந்தார். அதன்படி, தன்னுடைய திருமண வரவேற்புக்கு வருவோர் பரிசாக மலர்களையோ பழங்களையோ கொண்டு வர வேண்டாம் என்றும், திருமண நிகழ்ச்சிகளின்போது பல கிலோ எடையுள்ள மலர்கள் வீணாவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், திருமண வரவேற்பும் சிறப்பாகவே நடந்து முடிந்துள்ளது. மீண்டும் ஒரு பதிவை போட்டுள்ள தேஜஸ்வி சூர்யா, இந்த முறை விருந்தினர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அதில் தனது திருமண வரவேற்புக்கு வந்திருந்தவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொண்டதோடு, பிறகு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். அதாவது, தனது அழைப்பை ஏற்று இத்தனை பேர் வருவார்கள் என்று தான் எண்ணவில்லை என்றும், விழாவுக்கு வந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வரிசையில் நின்று மேடைக்கு வந்து வாழ்த்தியமைக்கு நன்றியும், அதிக நேரம் காத்திருக்க நேரிட்டதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார்.