``2026 தேர்தலில் விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சி" - டிடிவி தினகரன் ...
தீபாவளி : பாரம்பரியம் மாறா செட்டிநாட்டுப் பலகாரங்கள் - இன்றும் எப்படி தனித்து நிற்கின்றன?
வாடிக்கையாளர்களை கவரத் துரித உணவுகளின் வெரைட்டி அதன் தேவைக்கேற்ப மாறுபட்டுக் கொண்டே இருக்கும் வேளையில், பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யப்படும் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு இன்று மவுசு அதிகம் உள்ளது.
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதியில் தனித்துவமாகக் கருதப்படுவதில் கட்டடக்கலைக்கும் உணவு வகைக்கும் தனி இடம் உண்டு. . பாரம்பரிய சுவை, பாரம்பரியத் தயாரிப்புகளால் தனித்து நிற்கும் செட்டிநாட்டு பலகாரங்கள் உலக அளவில் புகழ்பெற்றவையாக உள்ளன.
இந்தச் செட்டிநாட்டு பலகாரங்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர், பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் செய்யப்படுகிறது. வீட்டிலேயே செய்து கடைகளுக்கு விநியோகம் செய்கின்றனர். கல்யாணம், காதுகுத்துச் சீர் முதல் தீபாவளி சீர் வரை இந்த செட்டிநாட்டு பலகாரங்கள் சிறப்பு இடம் பிடிக்கிறது.

காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் தயாரிக்கப்படும் செட்டிநாட்டுப் பலகாரங்கள் சென்னை, மதுரை, திருச்சி போன்ற தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அதேபோல பெங்களூர், கேரளா போன்ற வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாடு பலகாரங்கள் அனுப்பப்படுகின்றன.
தேன்குழல், முறுக்கு வகை, அதிரசம், மணஹோலம், மாவு உருண்டை, சீப்பு சீடை, தட்டை, கை முறுக்கு, காரா பூந்தி ஆகியவை செட்டிநாட்டுப் பலகாரங்களில் பிரபலமான பலகாரங்கள்.
பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் பாரம்பரிய முறைப்படி பக்குவத்துடன் இந்தப் பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தச் செட்டிநாட்டுப் பலகாரங்கள் செய்யும் வியாபாரிகள் தலைமுறைகளாக தரத்தை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இதனைச் செய்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.
கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்துள்ள இந்த பலகாரங்கள் திருமணம், வளைகாப்பு, தீபாவளி போன்ற அனைத்து நிகழ்ச்சியிலும் சீர்வரிசையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. லாபத்தை விடத் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இன்றும் மக்கள் மத்தியில் இந்தப் பலகாரங்களுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது.
இது குறித்து காரைக்குடியின் கோட்டையூரில் வீட்டிலேயே செட்டிநாடு பலகாரங்களை தயாரித்து 30 வருடங்களாக இதே தொழிலில் இருக்கும் சக்தி தேவி என்பவரிடம் பேசினோம்.
சக்தி தேவி கூறியதாவது, "செட்டிநாட்டு பலகாரங்கள் எனது மாமியார் காலத்திலிருந்து செய்து வருகின்றனர். இப்போது நாங்கள் அதை எடுத்து செய்து வருகிறோம். தலைமுறை தலைமுறையாக இதனை செய்து வருகிறோம். இது வெறும் லாபத்திற்காக மட்டுமல்ல, எங்களின் கலாச்சாரமாகவும் நாங்கள் பார்க்கிறோம்.. செட்டிநாடு பலகாரங்கள் இந்த அளவு மக்களுக்கு பிடித்ததற்கு முக்கிய காரணமே பாரம்பரிய முறைப்படி செய்வதுதான். விறகு அடுப்பில்தான் எல்லா பலகாரங்களும் இன்றும் செய்யப்படுகிறது.

சுத்தமான தேங்காய் எண்ணெயை இதற்காக பயன்படுத்துகிறோம். மற்ற பலகாரங்களில் இருந்து இந்த பலகாரங்கள் வேறுபட்டு இருப்பதற்கான முக்கிய காரணம் தயாரிப்பு முறையும் அதன் சுவையும் தான். தரமான பொருட்கள் கொண்டு செய்வதால் தான் அதன் சுவையும் அதிகமாக உள்ளது. மக்களுக்கும் பிடித்திருக்கிறது.
தற்போது எங்களிடமே இரண்டு கடைகள் உள்ளன. வீட்டிலேயே பலகாரங்கள் செய்து எங்கள் கடைக்கு விநியோகம் செய்வோம். அதுமட்டுமில்லாமல் தீபாவளி சீர், கல்யாண சீர் உள்ளிட்ட சீர்களுக்கும் எங்களிடம் வந்து ஆர்டர் கொடுப்பார்கள். தற்போது ஆன்லைன் ஆர்டர்கள் எடுப்பதில்லை. பலகாரங்கள் நொறுங்கிவிடும் என்பதால் அதன் தரத்திற்காகவே நாங்கள் ஆன்லைன் எடுப்பதில்லை. திருவிழா காலங்கள் மட்டுமல்லாமல் வருடத்தின் 365 நாளும் எங்களுக்கான வியாபாரம் இருக்கும்.
பண்டிகை காலங்களில் சற்று அதிகமாகப் போனியாகும். பலகாரங்கள் மட்டுமல்லாது செட்டிநாடு மசாலா சுவையில் பொடிகள் தயாரிக்கின்றோம். அதையும் மக்கள் விரும்பி அதிகம் வாங்குகின்றனர் என்கிறார். எல்லா வகையான பலகாரங்களையும் செய்கிறோம். செட்டிநாட்டு பலகாரங்கள் என்றாலே கை முறுக்கு, சீட்டு சீடை, மாவு உருண்டை, மணஹோலம் , அதிரசம் ஆகியவை பிரபலமானவை. செட்டிநாட்டு பலகாரம் என்று ஒரு பலகாரத்திற்கு புவிசார் குறியீடு கொடுக்க வேண்டும் என்றால் மணஹோலத்திற்குக் கொடுக்கலாம் . இதுவரை செட்டிநாடு பலகாரம் என்று குறிப்பிட்ட பலகாரங்களுக்கு அங்கீகாரம் கொடுக்காதது வருத்தமாக இருக்கிறது” என்று கூறுகிறார் சக்தி தேவி.