தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் குழு!
பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தைகள், என பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினர், சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை, சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க, பாஜக எம்பி ரவி சங்கர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அந்தக் குழுவின் உறுப்பினரான பாஜக எம்பி சாமிக் பட்டாச்சார்யா, பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டின்படி எல்லைக் கடந்த பயங்கரவாதம், பயங்கரவாதச் செயலாகவே கருதப்பட்டு அதற்கு ஏற்ப பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
”பிரதமர் நரேந்திர மோடி எங்களது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளார். அதாவது, வரும் காலத்தில், எல்லையைக் கடந்த பயங்கரவாதம், பயங்கரவாதச் செயலாகவே கருதப்பட்டு அதற்கு ஏற்ப பதிலடி கொடுக்கப்படும். உலகம் தற்போது சந்திக்கும் அச்சுறுத்தல் தீவிரவாதம், சட்டவிரோத குடியேற்றம் எனும் அச்சுறுத்தலை வங்கதேசத்தால் இந்தியா சந்தித்து வருகின்றது. தற்போது இந்தியாவில் நடைபெறுவது நாளை ஐரோப்பா முழுவதும் நடைபெறலாம். எனவே, நாம் தற்போது ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தை” என அவர் பேசியுள்ளார்.
இத்துடன், இந்தக் குழுவின் உறுப்பினர், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனையின் எம்பி பிரியாங்கா சதுர்வேதி, ”இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜியநிலை சகிப்புத்தன்மையை தெளிவாக எடுத்துரைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க 7 அனைத்துக் கட்சிக் குழுவினர் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அதில், தற்போது பெல்ஜியம் சென்றுள்ள பாஜக எம்பி ரவி சங்கர் தலைமையிலான குழுவில், தகுபதி புரந்தேஸ்வரி (தெலுங்கு தேசம்), பிரியங்கா சதுர்வேதி (சிவசேனை உத்தவ் தாக்ரே பிரிவு), குலாம் அலி கட்டானா (பாஜக), அமர் சிங் (காங்கிரஸ்), சாமிக் பட்டாச்சார்யா (பாஜக), முன்னாள் மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் மற்றும் தூதர் பங்கஜ் சரண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க:பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?