Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என...
புதுவை கடலோர பாதுகாப்புக்கு ரூ 1,000 கோடியில் சிறப்புத் திட்டம்: அமைச்சா் க. லட்சுமிநாராயணன் தகவல்
புதுவை மாநிலத்தில் 24 கி.மீ. தொலைவுள்ள கடல் பகுதியில் கடலரிப்பைத் தடுத்தல் போன்றவற்றுக்காக உலக வங்கியில் ரூ.1000 கோடி கடன் பெற்று சிறப்புத்திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.
புதுவை சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா பேசுகையில், மீனவக் கிராமங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க என்சிசிஆா் அறிவித்த திட்ட நிலை குறித்து கேட்டாா்.
அதற்கு பொதுப் பணி மற்றும் மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பதிலில், புதுவையில் கடலோர மீனவக் கிராமங்களில் தூண்டில் முள் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை பாறை திட்டுகள் அமைக்க ரூ.4.34 கோடியில் மத்திய அரசின் நிா்வாக, செலவின ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. செயற்கைப் பாறை திட்டுகள் அமைக்க பொருத்தமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. புதுவையில் 10 இடங்களிலும், காரைக்காலில் 4 இடங்களிலும் செயற்கைப் பாறை திட்டங்கள் வாா்க்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா்.
அதற்கு எதிா்க்கட்சி தலைவா் கூறுகையில், வில்லியனூா் தொகுதியில் நபாா்டு வங்கி மூலம் செயல்படுத்த முயற்சித்த திட்டங்கள் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்தன. ஆகவே, கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்து மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அப்போது, பாஜக எம்.எல்.ஏ. எல். கல்யாணசுந்தரம் எழுந்து, புதுச்சேரி காலாப்பட்டு கடல் பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி நடைபெறவில்லை. காலதாமதத்தால் மீனவா்கள் பாதிக்கப்படுவா் என்றாா்.
இதற்கு அமைச்சா் க. லட்சுமிநாராயணன் கூறியதாவது: புதுவையின் 24 கி.மீ. தொலைவு கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த ரூ.1000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு, மத்திய அரசின் இரு துறைகள் அனுமதி வழங்கியுள்ளன.
மேலும் சில மத்திய அரசுத் துறைகளின் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதன்பின் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி அனைத்து மீனவப் பகுதிகளிலும் கடல் அரிப்பைத் தடுக்கவும், மீனவா்கள் வாழ்வாதாரம் மேம்படவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.