மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
"பொதுச் செயலாளர் ஆன பின் ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் எடப்பாடி" - செங்கோட்டையன் காட்டம்
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "புரட்சித் தலைவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓபிஎஸ் - செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்திக்கவுள்ளோம்" என்றார்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மூவரும் துரோகிகள் என்றும் பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக தேவர் ஜெயந்திக்கு வந்துள்ளார்கள் என்றும் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எந்த தயக்கமும் இல்லை என கூறியிருந்தார். கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இந்நிலையில், ஏற்கெனவே கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிய செங்கோட்டையனை, நேற்று(அக்.31) அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக இன்று (நவம்பர்.1) காலை 11 மணிக்கு விரிவாக பேசுகிறேன் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் செங்கோட்டையன், " அதிமுகவிற்காக என்னை நான் அர்பணித்துக்கொண்டேன். கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஜெயலலிதா மறைந்தப் பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா என்னிடம் பேசினார். முதலமைச்சராக 2 முறை வாய்ப்பு கிடைத்தும் அதிமுக உடைந்துவிடக்கூடாது என விட்டுக்கொடுத்தேன். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் வெற்றியை வாய்ப்பை அதிமுக இழந்தது. பொதுச்செயலாளராக வெற்றி பெற்ற பிறகு ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வலையுறுத்தினோம். நான் விதித்தது கெடு அல்ல. பேசி முடிவெடுக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். இந்த கருத்தை முன்வைத்ததும் உறுப்பினர் பொறுப்பு மட்டுமின்றி மற்ற பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டேன். என்னை திமுகவின் B டீம் என்கிறார்கள். நான் திமுகவின் B டீம் இல்லை. கட்சியில் இருந்து நீங்கியதால் உண்மையிலேயே மனவேதனை அடைகிறேன். கண்ணீர் சிந்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
(தொடர்ந்து செங்கோட்டையனின் உரை இந்த செய்தியில் அப்டேட் செய்யப்படும்..)


















