திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள...
மதுரை: எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்; அனுமதித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்; பின்னணி என்ன?
எச்சில் இலையில் உருளுவது வழிபாட்டு முறையாக இருப்பினும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்ட நிர்வாகம், அனைத்து சாதி அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதன், கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், "கரூர் மாவட்டம் நேரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் உண்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்கக் கோரி மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த மே 18 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அவ்வாறு அங்கப்பிரதட்சணமும் செய்யப்பட்டது.
2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இதுபோல பக்தர்கள் உண்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் நீதிமன்றத்தில் பழைய உத்தரவுகளை மறைத்து, தங்களுக்குச் சாதகமான உத்தரவைப் பெற்று விட்டனர். இந்த உத்தரவு பலராலும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே பக்தர்கள் உணவு உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வின் முன் ஏற்கனவே விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவு தவறானது, பல உத்தரவுகளை மறைத்துப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவிற்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு, வழக்கினைத் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்த நிலையில் இன்று, "எச்சில் இலையில் உருளுவது வழிபாட்டு முறையாக இருப்பினும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இது போன்ற நிகழ்வுகளுக்குத் தடை விதித்துள்ளது. ஆகவே பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது" என உத்தரவிட்டனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
