``தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்?'' - உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், "தமிழகத்தைச் சேர்ந்தவர் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறாத சூழலில் எவ்வாறு பணி நீட்டிப்பு செய்ய முடியும்?" என கேள்வி எழுப்பி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கின் பின்னணி
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், தேனி மின் பகிர்மான வட்டத்தில் இளநிலை உதவியாளராக 2018 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவர் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட பள்ளியில் படித்தவர். தமிழ் வழியில் கல்வி பயிலாததால், பணியில் சேர்ந்து 2 ஆண்டிற்குள் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தமிழ் மொழித்தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் அவரை பணிலிருந்து விடுவித்து கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஜெயகுமார் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், "தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ், அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில்தான் நடைபெறுகிறது. மின்வாரியத்திலும் அப்படியே. இதனால் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற மின்வாரியத்தின் நடவடிக்கை தவறல்ல. இருந்தபோதும் மனுதாரர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதால் மீண்டும் தமிழ் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மீண்டும் வழங்கப்பட்ட வாய்ப்பிலும் வெற்றி பெறாததால் அவரை பணி நீக்கம் செய்து மின் வாரிய பொறியாளர் உத்தரவு பிறப்பித்தார்.
மேல்முறையீடு
தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி மீண்டும் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, தமிழகத்தில் வேலை செய்யக்கூடிய அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், மனுதாரர் தமிழர் என்பதால், இவருக்கு பணி வழங்க வேண்டும்" என உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் 'அந்த உத்தரவு அரசு ஊழியர்களின் பணி வரன்முறைக்கு எதிராக உள்ளது. எனவே, தனி நீதிபதி பிறபித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என மின்வாரியம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மொழி தெரியாவிட்டால் என்ன செய்வது? - நீதிபதிகள் கேள்வி
இந்த மனு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. "தமிழகத்தைச் சேர்ந்தவர் தமிழ் வழியில் கல்வி கற்கவும் இல்லை, தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெறவும் இல்லை. இப்படி உள்ள சூழலில் எவ்வாறு பணியில் நீடிக்க முடியும்? மேலும் தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்?" என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "சி.பி.எஸ்.இ கல்வியில் படித்தால் அரசிடம் வேலை கேட்காதீர்கள். தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிய வேண்டுமென்றால் தமிழ் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அரசுப் பணியாளருக்கு தமிழ் தெரியாது எனில் என்ன செய்வது? இங்கு மட்டும் அல்ல, எந்த மாநிலத்தில் அரசுப்பணி புரிந்தாலும், அந்த மாநிலத்தின் மொழி தெரிந்து இருக்க வேண்டும். தெரிய வில்லையெனில் என்ன செய்வது?" என தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.